search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும் - திருமாவளவன்
    X

    தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும் - திருமாவளவன்

    திருச்சியில் டிசம்பர் 10-ந்தேதி நடைபெறவிருந்த ‘தேசம் காப்போம்’ மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். #Thirumavalavan #DesamKappom #VCK
    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகளின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவரிடம் தமிழகம் முழுவதிலிருந்து நிர்வாகிகள் கட்சி நிதி அளித்தனர்.

    அதன்பிறகு திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    திருச்சியில் டிசம்பர் 10-ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.



    அன்று டெல்லியில் ராகுல் காந்தி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. எனவே டிசம்பர் 10-ந்தேதி திருச்சியில் நடைபெறவிருந்த தேசம் காப்போம் மாநாடு ஜனவரி மாதம் நடைபெறும். இதற்கான தேதி பிறகு அறிவிக்கப்படும்.

    கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதி அளித்ததை கண்டித்து திருச்சியில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்ற போராட்டம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கும், அந்த அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தமிழகத்தை காக்கவும் தி.மு.க. தலைமையிலான அணியில் விடுதலை சிறுத்தை அங்கம் வகிக்கிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகம் பாதிக்கப்படுவதுடன் மேலும் சில அணைகள் கட்டவும் வழி வகுக்கும்.

    எனவே அணை கட்ட அனுமதிக்க கூடாது. பா.ஜ.க. மக்களை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கர்நாடகாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொண்டுள்ளது.

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் மேகதாது அணை கட்டக்கூடாது என கூறியுள்ளார். அதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் திருச்சி போராட்டத்தில் தி.மு.க. கூட்டணியை பா.ஜனதா உடைக்க பார்க்கிறது என நான் தெரிவித்ததற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நான் அணையை பற்றி கவலைப்படாமல் அணியை பற்றி கவலைப்படுவதாக கருத்து தெரிவித்துள்ளார்.

    அணையை தடுக்க வேண்டும் என்றால் அணி பலமாக இருக்க வேண்டும். தமிழகத்தை காக்கவும், தேசத்தை மதவாத பிடியில் இருந்து காக்கவும் இதுபோன்ற பலமான அணி தேவை.

    தி.மு.க. அணியில் எங்களுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. தொகுதி குறித்து நிர்பந்திக்க கூடாது என்று எதுவும் கூறவில்லை. எங்கள் அணி பலமாக உள்ளது. திருச்சி ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தி.மு.க. அணியில் இருந்து தங்களை வெளியேற்ற சிலர் சதி செய்வதாக கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Thirumavalavan #DesamKappom #VCK
    Next Story
    ×