search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீர் அதிகளவில் உள்ளதால் வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது
    X
    தண்ணீர் அதிகளவில் உள்ளதால் வீராணம் ஏரி கடல்போல் காட்சி அளிக்கிறது

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.70 அடியாக உயர்வு

    கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 46.60 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் இன்று 46.70 அடியாக உயர்ந்துள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். வீராணம் ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும், விவசாய பாசனத்துக்கு உயிர்நாடியாகவும் விளங்குகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த ஜூலை மாதம் 26-ந் தேதி முதல் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இதையடுத்து சென்னைக்கும், விவசாய பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இந்த நிலையில் தற்போது பெரம்பலூர், அரியலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்கின்றது. இதனால் கீழணைக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதில் இன்று 1,350 கனஅடி நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    மேலும் செங்கால் ஓடை, பாப்பாக்குடி ஓடை உள்ளிட்ட பல்வேறு வாய்க்கால்கள் மூலமும் ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு 45 அடிக்கு கீழ் இருந்த வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று ஏரியின் நீர்மட்டம் 46.60 அடியாக இருந்தது. இன்று அது 46.70 அடியாக உயர்ந்துள்ளது.

    இந்த நிலையில் ஏரியில் இருந்து சென்னைக்கு 72 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. நேற்று 70 கனஅடி தண்ணீர் அனுப்பபட்டது. இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் இன்று வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்பட்டது. நேற்று விவசாய பாசனத்துக்கு 230 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று அது 200 கன அடியாக குறைக்கப்பட்டது.

    மேலும் வி.என்.எஸ். மதகு வழியாக வினாடிக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை காலங்களில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45 அடிக்கு மேல் உயராமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்த்து கொள்வர். ஆனால் தற்போது நீர்மட்டம் 46 அடியை தாண்டியுள்ளது.

    இது குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,

    கஜா புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயலின் போது தேவையான மழை இல்லாததால் தற்போது ஏரியின் நீர்மட்டத்தை உயர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவை உள்ளது என்பதாலும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும் வீராணம் ஏரியில் தொடர்ந்து தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.

    47 அடிக்கு மேல் தண்ணீர் வந்து விட்டால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருவது நிறுத்தப்படும். கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்படும். வீராணம் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என்றார். #VeeranamLake
    Next Story
    ×