search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் உருவ படத்துக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய காட்சி.
    X
    முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் உருவ படத்துக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய காட்சி.

    தாயார் மரணம் - முதலமைச்சர் நாராயணசாமிக்கு முக ஸ்டாலின், ப சிதம்பரம் ஆறுதல்

    புதுவை முதலமைச்சர் நாராயணசாமியின் தாயார் மரணமடைந்ததையடுத்து மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம் ஆகியோர் அவரது தாயார் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவருக்கு ஆறுதல் கூறினர். #Narayanasamy #MKstalin
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியின் தாயார் ஈஸ்வரி அம்மாள். 96 வயதான ஈஸ்வரி அம்மாள் தனது சொந்த கிராமமான பூரணாங்குப்பத்தில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரி அம்மாள் மரணமடைந்தார்.

    அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புதுவை லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி வீட்டிற்கு வந்தார். அங்கு ஈஸ்வரி அம்மாள் உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அவருடன் தமிழக முன்னாள் அமைச்சர் பொன்முடி, புதுவை தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், முன்னாள் முதல்-அமைச்சர் ஜானகிராமன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    பின்னர் மீண்டும் மு.க.ஸ்டாலின் லாஸ்பேட்டை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் சேலத்திற்கு சென்றார்.

    அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் நாராயணசாமி தாயாரின் இறப்பு ஈடுசெய்ய முடியாதது. நேற்றைய தினமே நேரில் வந்து அஞ்சலி செலுத்த நினைத்தேன். ஆனால், சூழ்நிலை காரணமாக என்னால் வர இயலவில்லை.

    எனவே, இன்று வந்து முதல்-அமைச்சர் நாராயணசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளேன் என்றார்.

    முன்னதாக இன்று காலை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் வீட்டுக்கு வந்து ஈஸ்வரி அம்மாள் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தி ஆறுதல் தெரிவித்தனர்.  #Narayanasamy #MKstalin
    Next Story
    ×