search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகா தீப தரிசனத்திற்கு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
    X

    மகா தீப தரிசனத்திற்கு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

    திருவண்ணாமலை மகா தீப தரிசனத்திற்கு மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    திருவண்ணாமலை:

    மகா தீப தரிசனத்துக்காக மலை ஏற 2,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.

    மகா தீப தரிசனத்தன்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரமுள்ள தீப மலை மீது 2,500 பக்தர்கள் மட்டும் நிபந்தனைகளுடன் ஏற உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளது.



    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மலை ஏற அனுமதிச்சீட்டு 2,500 பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் 23-ந் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டு பெற வருபவர்கள் உரிய அடையாள சான்று, ஆதாரங்களை காண்பிக்க வேண்டும். அனுமதி சீட்டு பெற்றவர்கள் மலை ஏறுவதற்கென அறிவிக்கப்பட்ட பேகோபுரம் எதிர்புறத்தில் அனுமதி சீட்டை காண்பித்து மலை ஏற வேண்டும். மற்ற வழிகளில் மலை ஏற அனுமதி இல்லை.

    மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்து செல்ல வேண்டும். கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களை கண்டிப்பாக எடுத்து செல்லக்கூடாது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்படும் நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வழியில் மட்டுமே மலை ஏறவும், இறங்கவும் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பரணி தீபம், மகா தீபம் ஏற்றும்போது, பக்தர்கள் கோவிலுக்குள் செல்லத் தேவையான கட்டண டிக்கெட்டுகள் இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

    பரணி தீபத்துக்கான ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் 500 எண்ணிக்கையில் விற்கப்படுகின்றன.

    மகா தீபத்துக்கு ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் ஆயிரமும், ரூ.600 மதிப்பிலான டிக்கெட்டுகள் 100 என மொத்தம் ரூ. 1,600 எண்ணிக்கையிலான சிறப்பு கட்டண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த டிக்கெட்டுகளை இன்று பகல் 11 மணி முதல் கோவிலின் இணைய தளமான www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். கட்டணச் சீட்டை பெற ஆதார் அட்டை, செல்லிடபேசி எண், இணையதள முகவரி ஆகியவை கண்டிப்பாகத் தேவை. ஓர் ஆதார் அட்டைக்கு ஒரு கட்டண சீட்டு மட்டுமே பதிவு செய்ய முடியும்.

    குறுஞ்செய்தி பதிவு செய்யப்பட்ட செல்லிப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும். கட்டணச் சீட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்பப்படும்.

    தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கட்டணச் சீட்டு அசல், ஆதார் அட்டை அசலுடன் வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. #KarthigaiDeepam #ArunachaleswararTemple
    Next Story
    ×