search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் இறந்தவரின் இரு கைகளை புதுவை வாலிபருக்கு பொருத்தி ஜிப்மர் டாக்டர்கள் சாதனை
    X

    விபத்தில் இறந்தவரின் இரு கைகளை புதுவை வாலிபருக்கு பொருத்தி ஜிப்மர் டாக்டர்கள் சாதனை

    பெங்களூரில் மோட்டார்சைக்கிள் விபத்தில் இறந்தவரின் இரு கைகளை புதுவை வாலிபருக்கு பொருத்தி ஜிப்மர் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் தொழிற்சாலை ஒன்றில் நடந்த விபத்தில் 31 வயது வாலிபர் ஒருவர் இரு கைகளையும் இழந்தார்.

    அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாற்று கை பொருத்துவதற்கு டாக்டர்கள் முயற்சி செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பெங்களூரில் 22 வயது பீகார் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலத்த காயம் அடைந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

    அவருடைய நிலைமை மோசமானதை அடுத்து 16-ந் தேதி நாராயணா ஹெல்த் சிட்டி என்ற தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் மூளைசாவு அடைந்தார். இதைத்தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர்.

    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வாலிபருக்கு பெங்களூர் விபத்தில் இறந்த வாலிபரிடம் இருந்து இரு கைகளையும் தானம் பெற முயற்சி எடுக்கப்பட்டது. அதற்கு சம்மதம் கிடைத்தது.

    அதை தொடர்ந்து பெங்களூர் வாலிபரின் கைகள் இரண்டும் துண்டிக்கப்பட்டு ரசாயனங்கள் கலந்து ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டது.

    ஆம்புலன்ஸ் வாகனத்தில் உடனே ஏற்றி புதுவைக்கு கொண்டு வந்தனர். நேற்று பகல் 12.15 மணிக்கு பெங்களூரில் இருந்து அந்த வாகனம் புறப்பட்டது.

    புதுவைக்கும், பெங்களூருக்கும் இடைப்பட்ட தூரம் 300 கி.மீட்டர். இந்த தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்து 4.15 மணிக்கு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு வாகனம் வந்து சேர்ந்தது.

    இங்கு அந்த கைகளை பொருத்தி ஆபரேசன் செய்வதற்காக 7 டாக்டர்கள் தயார் நிலையில் இருந்தனர்.

    கைகள் வந்ததும் அவர்கள் புதுவை வாலிபருக்கு அவற்றை பொருத்தினார்கள். நீண்ட நேரம் ஆபரேசன் செய்து கை பொருத்தப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

    பெங்களூர் வாலிபரின் இதயம், இதய வால்வுகள், சிறுநீரகம், ஈரல், கண்கள் ஆகியவையும் தானமாக கொடுக்கப்பட்டன.

    அதில் இதயத்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு பொருத்தினார்கள். ஈரல் பெங்களூரை சேர்ந்த 67 வயது நபருக்கு பொருத்தப்பட்டது. அவரது ஈரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு செயல்பட முடியாமல் இருந்தது.

    சிறுநீரகம் மைசூரில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு பொருத்தப்பட்டது.

    பெங்களூர் வாலிபர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை காவலாளியாகவும், தாயார் கூலித்தொழிலாளியாகவும் இருந்து வந்தனர்.

    இந்த குடும்பத்தில் அடுத்தடுத்து சோகங்கள் நடந்தன. ஏற்கனவே வாலிபரின் உடன் பிறந்தோர் 3 பேர் இறந்து விட்டனர். கடைசியாக இருந்த இவரும் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுவையில் கைகள் பொருத்தப்பட்ட அந்த நபரின் விவரங்களை இதுவரை ஜிப்மர் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிடவில்லை. #tamilnews
    Next Story
    ×