search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை - ராமேசுவரம்-பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
    X

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை - ராமேசுவரம்-பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. #Rameswaramfishermen #Fishermen

    ராமேசுவரம்:

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வாரம் கஜா புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர்.

    கஜா புயல் கரையை கடந்த பிறகு கடல் கொந்தளிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து வானிலை மைய அறிவிப்பை தொடர்ந்து மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கியது.

    இந்த நிலையில் தற்போது தமிழகத்தையொட்டி உள்ள வங்க கடலில் தென்மேற்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் உள்மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேலும் ராமேசுவரம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றதுடன் காணப்படுகிறது. இதனால் ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக இன்று கடலுக்கு செல்ல இருந்த பாம்பன் பகுதி மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திடீரென தடை விதிக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச் சோடி காணப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பெரும்பாலான இடங்களில் தொடர் மழை பெய்தது.காற்றுடன் பெய்த மழை காரணமாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் உள்ள சாலையில் மரம் முறிந்து கார் மீது விழுந்தது. மேலும் சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது.

    தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார். #Rameswaramfishermen #Fishermen

    Next Story
    ×