search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை செய்த பாலம்மாள் எழுதிய உருக்கமான கடிதம்.
    X
    தற்கொலை செய்த பாலம்மாள் எழுதிய உருக்கமான கடிதம்.

    நாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே போலீஸ் டார்ச்சரால் குழந்தையை கொன்று விதவை பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த சடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி பாலம்மாள் (வயது 25). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பாலகுமார் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது.

    இந்த நிலையில் சண்முகசுந்தரம் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதத்துக்கு முன்பு திடீரென்று இறந்து விட்டார். இதனால் பாலம்மாள் சோகத்தில் இருந்து வந்தார். இதையடுத்து பாலம்மாள், தன்னுடைய குழந்தை பாலகுமாருடன் மூலைக்கரைப்பட்டி அருகே பிள்ளையார்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு பாலம்மாள் பாலகுமாரின் கழுத்தில் சேலையால் கட்டி தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்தார். பின்னர் அதே சேலையால் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தாய் மகன் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த பாலம்மாளின் வீட்டில் அவர் எழுதிய ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

    அதில் தற்கொலை செய்தது ஏன் என்பது பற்றி பாலம்மாள் எழுதியிருந்தார். கணவர் இறந்தபின்னர் பாலம்மாளுக்கும் அவரது மாமியார் மகராசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்த‌து. கணவரின் ஆதார் அட்டையை மகராசி எடுத்து வைத்துக்கொண்டு கொடுக்க மறுத்தாராம். மேலும் பாலம்மாள் மீது மகராசி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளார்.

    அந்த புகாரின்பேரில் விஜயநாராயணம் போலீசார் மற்றும் நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பாலம்மாளிடம் அவர்கள் விசாரித்தபோது போலீசார் அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது. இது பாலம்மாளை மனவேதனை படுத்தியது. ஏற்கனவே கணவரை பறிகொடுத்த வேதனையில் இருந்த பாலம்மாள், அடுத்து பல்வேறு நெருக்கடிகளால் மன உளைச்சலுக்கு உள்ளானார்.

    இதனால் ஏற்பட்ட வேதனையில் அவர் மகனை கொன்று தற்கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே பாலம்மாள் தற்கொலை சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் அவரது உறவினர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் இரவு அந்த வழியே சென்ற 2 அரசு பஸ்கள் மீது கல்வீசினர். இதில் பஸ் கண்ணாடி உடைந்து சேதமானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதட்டம் நிலவுகிறது.

    இதனால் அங்கு போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள். 6 மாத ஆண் குழந்தையை கொன்று விட்டு, தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×