search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை நடந்த வீடு முன்பு திரண்டு இருந்த பொதுமக்கள்.
    X
    கொலை நடந்த வீடு முன்பு திரண்டு இருந்த பொதுமக்கள்.

    பொள்ளாச்சியில் மனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் குடும்ப தகராறு காரணமாக மனைவி, மாமியாரை கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொள்ளாச்சி:

    கோவை போத்தனூரை சேர்ந்தவர் பாபு(வயது 50). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுமதி(42).

    இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் மனமுடைந்த சுமதி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சி சி.டி.சி. காலனியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு தாய் விசாலாட்சியுடன்(60) வசித்து வந்தார்.

    பாபு அடிக்கடி மாமியார் வீட்டுக்கு குடிபோதையில் சென்று மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். இது சுமதிக்கு மிகவும் மன வேதனையை ஏற்படுத்தியது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீசு அனுப்பினார். இதனால் பாபு ஆவேசம் அடைந்தார்.

    நேற்று நள்ளிரவு மாமியார் வீட்டுக்கு சென்ற பாபு நீண்ட நேரம் கதவை தட்டினார். இதனால் மாமியார் விசாலாட்சி கதவை திறந்து பாபுவை கண்டித்தார். அப்போது பாபு மறைத்து வைத்திருந்த கத்தியால் விசாலாட்சி கழுத்தை அறுத்தார். இதனால் அவர் அலறித் துடித்தபடி ரத்த வெள்ளத்தில் சாய்ந்து இறந்தார்.

    சத்தம் கேட்டு சுமதி வெளியே ஓடி வந்தார். அவரை கீழே தள்ளிய பாபு மனைவி என்றும் பாராமல் சுமதியின் கழுத்தையும் அறுத்து கொலை செய்தார். பின்னர் வீட்டுக்குள் சென்ற பாபு மேற்கூரையில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொலை செய்யப்பட்ட விசாலாட்சி-சுமதி

    விசாலாட்சியின் மகன் பிரகாஷ் அப்பகுதியில் வசித்து வருகிறார். அவர் வழக்கம்போல தாயை பார்ப்பதற்காக இன்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். வீட்டில் தாய், தங்கை ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற போது அங்கு பாபு தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து அவர் பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சம்பவஇடத்துக்கு டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி, இன்ஸ்பெக்டர் நடேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    குடும்ப பிரச்சனையில் மனைவி, மாமியாரை கொலை செய்து விட்டு பாபு தற்கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×