search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும்- கேபி முனுசாமி
    X

    அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும்- கேபி முனுசாமி

    புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும் என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs
    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தஞ்சையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு நலத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்துள்ளனர். அவரது வழியிலேயே தற்போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவிக்கும் திட்டங்களும் மக்கள் பயன் பெறும் வகையில் சென்றடைகிறது.

    மேலும் இந்த அரசு புதிய புதிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு வருவதால் சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    கடந்த ஓராண்டாக தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் எத்தனை தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தார்கள். கடைசியில் குற்றாலத்தில் தங்கியிருந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் மக்களை நினைத்து பார்க்காமல் தற்போது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் தினகரன் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து நாடகம் நடத்துகிறார்.

    அ.ம.மு.க. என்பது ஒரு கட்சியே இல்லை. தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் . அவருக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    கட்சியில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் இதில் புதுப்பித்து கொண்டால் மட்டுமே அவர்கள் கட்சியில் உறுப்பினராக இருக்க முடியும். இந்த புதிய உறுப்பினர் சேர்ப்பில் சசிகலா உறுப்பினராகவில்லை. எனவே அவர் கட்சியில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே கட்சியிலேயே இல்லாத ஒருவர் எப்படி பொதுச் செயலாளர் பதவி வகிக்க முடியும்.?

    ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் டோக்கன் கொடுத்து வாக்குகள் வாங்கினார் என்றால், அப்போது மக்கள் ஏமாந்தார்கள். தங்களை தினகரன் ஏமாற்றி விட்டார் என்று விரட்டி அடித்தார்களே அது நாடு முழுக்க தெரிந்தது. ஆகவே இந்த தேர்தலில் அ.ம.மு.க. 20 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்.

    தற்போது அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்த பணி தொண்டர்களிடம் முழுமையாக சென்றடைந்த பிறகு தலைமை முடிவு செய்து பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும்.

    சந்திரபாபு நாயுடுவை மு.க.ஸ்டாலின் சந்திப்பது அவர்கள் மாநிலத்திற்கு தேவை என்பதாலும், மு.க.ஸ்டாலினுக்கும் வேறு வழியில்லை என்பதாலும் அவர் சந்தித்தார். ஆனால் அ.தி.மு.க. தமிழக மக்களிடையே வலுவான கட்சி என்பதால் நாங்கள் யாரையும் சந்திக்க அவசியம் இல்லை.

    சர்கார் படத்தில் இலவசங்களை விமர்சித்து காட்சிகள் வந்தது. அந்த படத்தை இயக்கிய முருகதாஸ் அரசு எந்த அடிப்படையில் இலவசங்கள் வழங்கியது என்று தெரியாமல் எடுத்துள்ளார்.

    இந்த படத்தை கொண்டு வந்தது மாறன் சகோதரர்கள். அரசியலில் ஆதாயம் தேடுவதற்காகவும், மு.க.ஸ்டாலினை திருப்தி படுத்துவதற்காகவும் இது போன்று படத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதில் முருகதாசும், நடிகர் விஜய்யும் பலிகடா ஆகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs
    Next Story
    ×