search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறவறம் மேற்கொண்ட ஜெயின் சமூகத்தினரை படத்தில் காணலாம்.
    X
    துறவறம் மேற்கொண்ட ஜெயின் சமூகத்தினரை படத்தில் காணலாம்.

    ஜெயின் சமூகத்தை சேர்ந்த 20 பெண்கள் துறவறம் பூண்டனர்

    ஜெயின் சமூகத்தை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 23 பேர் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் துறவறம் பூண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் இல்லற வாழ்வில் இருந்து விடுபட்டனர்.
    சென்னை:

    குழந்தைகள், இளம்பெண்கள், வயதானவர்கள் என அனைத்து வயதினரும் துறவியாக மாறலாம் என்று ஜெயின் சமூகம் கூறுகிறது. பொன், பொருள், திருமண பந்தம் என இல்லற வாழ்வில் இருந்து விடுபட்டு மோட்சம் அடைவதற்காக இதுபோல் ஜெயின் சமூகத்தினர் துறவறம் பூண்டு வருகின்றனர்.

    அந்தவகையில், இச்சமூகத்தை சேர்ந்த 20 பெண்கள் உள்பட 23 பேர் ஒரே நேரத்தில் துறவறம் ஏற்கும் நிகழ்ச்சி சென்னை மாதவரத்தில் உள்ள ஜைனத் தேரபாந்த் ஆசிரமத்தில் நேற்று நடந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் மகன் ஆகிய 4 பேரும் அடங்குவார்கள். மேலும் ஒரு சிறுவனும் துறவறம் பூண்டான்.

    பெண்கள், ஆண்கள் தனித்தனியாக துறவறம் செல்வதற்கான உறுதிமொழிகளை எடுத்தனர். இதையடுத்து 23 பேருக்கும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த துறவி ஆச்சார்யா மஹாஸ்ரமண் துறவறம் செய்துவைத்தார். இதையடுத்து அவர்களிடம் இருந்த அனைத்து பொருட்களும் களையப்பட்டன. தொடர்ந்து துறவறம் ஏற்பதற்கு முன்பு இருந்த பெயர்களும் மாற்றப்பட்டன. வெள்ளை நிற ஆடை மட்டுமே அவர்கள் அணிந்திருந்தனர்.

    முன்னதாக துறவறம் பூண்டவர்களின் குடும்பத்தினரிடம், ‘உங்களுடைய உறவினர்கள் துறவறம் செல்வதற்கு சம்மதம் தானா?’ என்று ஆச்சார்யா மஹாஸ்ரமண் கேட்டார். அதற்கு துறவறம் பூண்டவர்களின் குடும்பத்தினர் ‘பரிபூரண சம்மதம்’ என்று தெரிவித்தனர். மேலும் ‘துறவறம் பூண்டவர்களிடமும், விருப்பம் இல்லாமல் துறவறம் செல்லவேண்டாம். இப்போதும் கடைசி வாய்ப்பு இருக்கிறது. குடும்பத்தினரோடு செல்ல விருப்பம் உள்ளவர்கள் செல்லலாம்’ என்று கூறினார்.

    இதற்கு துறவறம் சென்றவர்கள் தங்களுடைய விருப்பத்தின் பேரிலேயே துறவறம் செல்வதாக ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.

    துறவறம் மேற்கொண்ட  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்.

    துறவறம் பூண்ட 23 பேரில் சுபம் ஆச்சா என்ற சிறுவன் தான் மிகவும் வயது குறைந்தவன். 11 வயது நிரம்பிய அவன் 6-ம் வகுப்பு தான் முடித்துள்ளான். சுபம் ஆச்சாவின் தந்தை கமல் கூறும்போது, ‘எனக்கு 2 மகன்கள். அதில் மூத்த மகனான சுபம் ஆச்சா துறவறம் செல்கிறேன் என்று கூறியதும் மனதுக்கு வருத்தமாக இருந்தது. பின்னர் அவன் விருப்பப்படியே செல்ல அனுமதித்துவிட்டோம்’ என்றார்.

    சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் அசோக் போரா அவருடைய மனைவி புஷ்பலதா, மகள் கோமல், மகன் குல்தீப் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அசோக் போராவின் மற்றொரு மகளும் ஏற்கனவே துறவறம் பூண்டுவிட்டார். அசோக் போராவின் ஒட்டுமொத்த குடும்பத்தினரும் துறவறம் பூண்டுள்ளனர்.

    இவர்களில் கோமல் எம்.பி.ஏ., ஜெயின் சமூகவியல் முதுகலை படிப்பு, மதம் சார்ந்த முதுகலை படிப்பையும், குல்தீப் பி.இ., ஜெயின் சமூகவியலில் முதுகலை படிப்பு, மதம் சார்ந்த முதுகலை படிப்பையும் படித்துள்ளனர். உயர் படிப்புகளை அவர்கள் 2 பேரும் அமெரிக்காவில் படித்துள்ளனர். இதேபோல துறவறம் பூண்டவர்கள் 15-க்கும் மேற்பட்டோர் உயர் படிப்புகளை படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×