search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்?:  பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி
    X

    ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்?: பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி

    பாலாறு பிரச்சனை குறித்து ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். #DMK #DuraiMurugan #EdappadiPalaniswami
    சென்னை:

    தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் பாலாறு பிரச்சனை பற்றி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் ஏன் பேசவில்லை” என்று பல பிரச்சனைகளைப் போல பாலாறு வரலாறும் தெரியாமல் கேள்வி எழுப்பியிருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டுவதை உறுதியாக எதிர்த்ததும், அதற்கான வழக்கினை சுப்ரீம் கோர்ட்டில் ஆக்கபூர்வமாக நடத்தி, சாட்சிகள் விசாரணை வரைக்கும் கொண்டு வந்ததும் தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த தி.மு.க. அரசுதான் என்பது ஏனோ முதல்-அமைச்சருக்குத் தெரியவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டன. பணிகள் நடைபெற்ற நேரத்தில் கூட அதைத் தடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-7-2016 அன்றே வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். அந்த ஆர்ப்பாட்டம் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொண்ட அ.தி.மு.க. அரசு சுப்ரீம் கோர்ட்டில் “தடுப்பணை கட்ட தடையாணை” கேட்டு வழக்குத் தொடர்ந்தது.

    தன் மீதுள்ள ஊழல் வழக்கில் பதைபதைப்புடன் ஓடோடிச் சென்று சுப்ரீம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற எடப்பாடி பழனிசாமி, அதே அக்கறையுடனும், வேகத்துடனும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஏன் தடை உத்தரவு பெறவில்லை?. இதைத்தான் நேரத்திற்கேற்ப நிறம்மாறும் செயல் என்று கூற வேண்டும்.

    முதல்-அமைச்சரான பிறகு ஆந்திர முதல்-மந்திரிக்கு எத்தனை கடிதம் எழுதினார்?. பொதுப் பணித் துறை அமைச்சராக இருக்கும் இவர் அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சரிடமாவது பேசினாரா? பிரதமர் நரேந்திரமோடியை பலமுறை சந்தித்துள்ள முதல்-அமைச்சர் பாலாற்று பிரச்சினை குறித்து எத்தனை முறை பேசினார்?. எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்தும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சரான என்னைப் பார்த்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த கேள்வியை எழுப்புவது ஆட்சியில் இருப்பது அவரா அல்லது நாங்களா என்ற கேள்வியை எழுப்புகிறது.

    தி.மு.க.வை பொறுத்தவரை, கொள்கை அளவில் கூட்டணி அமைப்பதில் வெளிப்படைத்தன்மை நிறைந்த கட்சி என்பது திடீர் கட்சி இணை ஒருங்கிணைப்பாளரான முதல்-அமைச்சருக்கு தெரியாது. குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றதே தவிர, எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கும் அ.தி.மு.க. பிரிவு போல் பா.ஜ.க.வுக்கும், பிரதமர் மோடிக்கும் கைகட்டி வாய்பொத்தி நின்று அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு, மாநில உரிமைகளை மனச்சாட்சியின்றி அடகு வைத்து விட்டு திரைமறைவில் கூட்டணி வைத்துக் கொண்டிருக்கவில்லை.

    தமிழக நலனுக்காக மத்திய அரசுடன் இணக்கமான உறவு வைத்துள்ளோம் என்று கூறும் பழனிசாமி, “அ.தி.மு.க. முதல்-அமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் அளித்த கோரிக்கை மனுக்களில் உள்ள எத்தனை கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என்று வெள்ளையறிக்கை வெளியிடத் தயாரா?. ஊழலில் இருந்து தப்பிக்க மத்திய அரசுடன் சொந்த நலனுக்கான உறவே தவிர, தமிழக நலனுக்காக துளியும் இல்லை.

    ஆகவே சந்தர்ப்பவாதத்துக்கு சரியான அடை யாளம் பிளவுபட்ட அ.தி.மு.க.வின் ஒரு பிரிவின் இணை ஒருங்கிணைபாளராக இருக்கும் முதல்-அமைச்சர்தானே தவிர, துணிச்சலுடனும், கொள்கை உறுதியுடனும் பா.ஜ.க.வையும், ஊழல் அ.தி.மு.க.வையும் தீரமுடன் நிமிர்ந்து நின்று எதிர்க்கும் தி.மு.க. தலைவரோ, தி.மு.க.வோ அல்ல என்பதை எடப்பாடி பழனிசாமி இப்போதாவது புரிந்துகொள்வது நல்லது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #DMK #DuraiMurugan #EdappadiPalaniswami
    Next Story
    ×