search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலைக்கு முயன்ற கருணாஸ் எம்.எல்.ஏ. கார் டிரைவர் கார்த்திக்.
    X
    தற்கொலைக்கு முயன்ற கருணாஸ் எம்.எல்.ஏ. கார் டிரைவர் கார்த்திக்.

    நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் கருணாஸ் எம்எல்ஏ கார் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலைக்கு முயற்சி

    நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் கருணாஸ் எம்.எல்.ஏ. கார் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி மகன் கார்த்திக் (வயது 27), இவர் கருணாஸ் எம்.எல்.ஏ.வின் கார் டிரைவர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாங்குநேரி அருகே அரசு பஸ்கள் கல்வீசி தாக்கப்பட்டது. இதுதொடர்பாக நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கருணாஸ் எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்திக் மற்றும் சிலர் சேர்ந்து பஸ்கள் மீது கல்வீசியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து கார்த்திக் மற்றும் சிலரையும் நாங்குநேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கார்த்திக் ஜாமீனில் விடுதலையாகி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனிடையே கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் போலீசார் இரவு நேரங்களில் சோதனை செய்ய வந்திருப்பதாக கூறி வந்துள்ளனர்.

    இதனைதொடர்ந்து கார்த்திக், மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை (28), சுப்பையா (18) ஆகிய 3 பேரும் நேற்று இரவில் நாங்குநேரி போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். ஜாமீனில் வந்த பின்னரும் எங்களை ஏன் தொந்தரவு செய்தீர்கள் என்று போலீசாரிடம் கேட்டுள்ளனர்.

    போலீசார் 3 பேரையும் வெளியேறும் படி கூறினர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தனர். இதில் ஏற்பட்ட தகராறில் போலீசார் 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த கார்த்திக், சுப்பையா, சாமிதுரை மூவரும் திடீர் என தாங்கள் கொண்டு வந்திருந்த மண் எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

    இதைப்பார்த்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு, நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுப்பையா மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் நாங்குநேரி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×