search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை, கோவைக்கு சிறப்பு ரெயில்கள்
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை, கோவைக்கு சிறப்பு ரெயில்கள்

    தீபாவளி பண்டிகையையொட்டி தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. கூட்டநெரிசல் இன்றி சென்றதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசலை சமாளிக்க சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    அதன்படி தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பயணிகளுடன் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல 5-ந் தேதி(திங்கட்கிழமை)யும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்கள், நெல்லையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

    இதேபோல சென்னை -கோவை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 5-ந் தேதியும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி ஆகிய இரு நாட்களும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.

    நெல்லை மற்றும் கோவைக்கு தாம்பரத்தில் இருந்து தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதால் 2 ரெயில்களிலும் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் குடும்பத்தினரோடு சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.

    இதேபோல தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிக பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்தனர். 
    Next Story
    ×