search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் - விவசாயிகள் ஆவேசம்
    X

    நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் - விவசாயிகள் ஆவேசம்

    நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு நிரந்தர தடை விதிக்கவேண்டும் என பொட்டிப்புரம் கிராம விவசாயிகள் தெரிவித்துள்ளனர். #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிப்புரம் பகுதியில் அம்பரப்பர் மலையை குடைந்து ரூ.1500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இம்மனுவை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்கு இடைக்கால தடை விதித்தும், தேசிய வனவிலங்குகள் வாரியத்தின் அனுமதியை பெறுமாறும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு பொட்டிப்புரம் கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து பொட்டிபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது

    பெரியகருப்பன்:- ஆரம்ப கட்டத்தில் இருந்தே நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறோம். எங்களுக்கு உதவியாக தேனி மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஆதரவு தெரிவித்தனர். நியூட்ரினோ ஆய்வு மையம் அமையும் போது ஏற்படக்கூடிய பாதிப்புகள்குறித்து நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அதிகாரிகளால் சரியான பதில் அளிக்க முடியவில்லை.


    தற்போது பசுமை தீர்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பு ஓரளவுக்கு ஆறுதல் அளித்துள்ளது. இத்திட்டத்தை நிரந்தரமாக தடை செய்யவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

    பிச்சைமுத்து :- மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் போலியான அறிக்கைகளை பெற்று நியூட்ரினோ ஆய்வுமையம் அமைக்க உத்தரவிட்டுள்ளது. இப்பகுதிக்கு நேரடியாக வந்து பார்வையிட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டிருக்கவேண்டும். மேற்கு தொடர்ச்சி மலை வனவிலங்குகள் மற்றும் பறவைகள் வாழும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும்.


    இங்கு நியூட்ரினோ ஆய்வு மையம் அமைந்தால் இயற்கை பாதிக்கப்படுவதுடன் விவசாயமும் செய்யவே முடியாத நிலை உருவாகும். இதற்காகத்தான் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை அழிக்கும் இத்திட்டத்தை கைவிடவேண்டும். #BanOnNeutrino #Neutrino #NationalGreenTribunal

    Next Story
    ×