search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி.
    X
    சிறுமி தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுத காட்சி.

    புதுக்கோட்டை அருகே 3 வயது குழந்தை கழுத்து அறுத்து கொலை

    புதுக்கோட்டை அருகே 3 வயது குழந்தை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள குரும்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி, கூலித்தொழிலாளி. இவரது மனைவி முருகாயி. இவர்களது மகள் ஷாலினி (வயது 3). நேற்று மாலை இவள், விளையாடுவதற்காக வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் அவள் வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவளது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் ஷாலினி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அப்பகுதி கிராம எல்லை காட்டுப் பகுதியில் ஷாலினி இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு ஷாலினி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஷாலினியின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் இலுப்பூர் டி.எஸ்.பி. கோபாலசந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஷாலினியை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஷாலினி இறந்து கிடந்த இடம் அருகே பிளேடுகள் கிடந்தன. இதனால் மர்ம நபர்கள் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. நேற்றிரவு சிறுமி தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் நைசாக பேச்சு கொடுத்து, அவளை அங்கிருந்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் விசாரணை முடிவில் சிறுமி கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    சிறுமியின் பெரியப்பா மகளுக்கு அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே சிறுமி கொலை தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொலையாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×