search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் சிக்கிய கார்.
    X
    விபத்தில் சிக்கிய கார்.

    பெருந்துறை அருகே விபத்து- லாரி மீது கார் மோதி கேரள அரசு ஊழியரின் தந்தை பலி

    பெருந்துறை அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் கேரள அரசு ஊழியரின் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    கேரள மாநிலத்தை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 40), இவர் கேரள மாநில அரசு ஊழியராக உள்ளார்.

    இவர் தனது தந்தை தாமோதரன் (75), தாய் ராதா (60), மனைவி தீபா (36) ஆகியோருடன் சென்னையில் இருந்து கேரளா நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.

    காரை தேவராஜ் ஓட்டினார். முன் சீட்டில் தாமோதரனும், பின் சீட்டில் ராதா, தீபா ஆகியோரும் இருந்தனர்.

    இன்று அதிகாலை அவர்கள் வந்த கார் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிக்கோவில் பைபாஸ் அருகே வந்து கொண்டிருந்தது.

    திடீரென கார் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இதில் முன் சீட்டில் இருந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    காரில் தாமோதரன் பக்கத்தில் பொருத்தப்பட்ட பலூன் வேலை செய்யாததால் அவர் பலியானதாக கூறப்படுகிறது. ஆனால் தேவராஜ் லேசான காயத்துடன் தப்பினார்.

    பின் சீட்டில் அமர்ந்திருந்த தீபாவும், ராதாவும் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    காயம் அடைந்த தீபாவையும், ராதாவையும் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×