search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே டாஸ்மாக் பாரில் தகராறு கார் டிரைவர் கொலை
    X

    கோவை அருகே டாஸ்மாக் பாரில் தகராறு கார் டிரைவர் கொலை

    கோவை மாவட்டம் சூலூர் அருகே டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் பள்ளபாளையத்தை சேர்ந்தவர் அருண் (வயது 30). கால் டாக்சி டிரைவர்.

    இவர் நேற்று இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த கோபால் (25), தேவேந்திரபாபு ஆகியோருடன் மது குடிப்பதற்காக பள்ளபாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாருக்கு சென்றார்.

    பாரில் அருண் வாங்கிய ‘சைடு-டிஸ்’ பொருட்களுக்கு பணம் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பார் உரிமையாளர் துரை என்ற முருகானந்தம்(41) என்பவர் அருணிடம் பணம் கேட்டார். இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது அருண் பிராந்தி பாட்டிலால் துரையை தாக்கினார். இதைப் பார்த்த துரையின் நண்பரான ஆட்டோ டிரைவர் சதிஷ்(25) என்பவர் அருணை தடுத்தார். எனினும் அருண் பாரில் கிடந்த கட்டையை எடுத்து துரையை தாக்கினார். மேலும் கோபால், தேவேந்திர பாபு ஆகியோரும் துரையை தாக்க முயன்றுள்ளனர்.

    இதனால் ஆவேமடைந்த சதிஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் அருணை குத்தினார். இதில் அவரது தலை, தோள் உள்பட பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.

    சதிஷ் தாக்கியதில் கோபால், தேவேந்திர பாபு ஆகியோரும் காயம் அடைந்தனர். உடனே சதிஷ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    காயமடைந்த கோபால், தேவேந்திரபாபு ஆகியோர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். இதே போல தாக்குதலில் காயமடைந்த துரையும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூலூர் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தி சதிசை கைது செய்தனர். அருண் பல மாதங்களாக இந்த பாரில் வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுப்பது கிடையாது என்றும், மது அருந்துபவர்களிடம் தகராறு செய்வதும் வழக்கம் என்றும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அருணை பார்உரிமையாளர் துரை பலமுறை கண்டித்து வந்துள்ளார். நேற்றும் அருண் பாரில் தகராறு செய்வதாக வந்த தகவலின் பேரில் துரை, சதிசை அழைத் துக் கொண்டு பாருக்கு சென்றுள்ளார். அங்கு அருணிடம் ‘சைடு- டிஸ்’ பொருட்களுக்கான பணத்தை கேட்டபோது தான் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு கொலையில் முடிந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட அருண் உடல் இன்று கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    அருணுக்கு நித்யா(28) என்ற மனைவியும், தர்ஷினி (3) என்ற மகள், சுதர்சன்(1½) என்ற மகன் உள்ளனர்.
    Next Story
    ×