search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    814 கால்நடை டாக்டர்கள் விரைவில் நியமனம்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்
    X

    814 கால்நடை டாக்டர்கள் விரைவில் நியமனம்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்

    கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 814 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #UdumalaiRadhakrishnan
    சென்னிமலை:

    சென்னிமலையில் தியாகி கொடிகாத்த குமரன் 115-வது பிறந்த தின விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கொடிகாத்த குமரன் தனது 28-வது வயதில் திருப்பூரில் நடைபெற்ற ஒரு சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களால் தாக்கப்பட்டதால் தான் ஏந்திய சுதந்திர கொடியினை கீழே விழாமல் தாங்கி பிடித்து தேசத்திற்காக தன்னுயிரை நீத்தார்.

    அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருப்பூரில் கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம் அமைத்து ஆண்டுதோறும் அரசின் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. கொடி காத்த குமரன் பிறந்த நாளான அக்டோபர் 4-ந்தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாட முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.

    அதன்படி, 2-வது ஆண்டாக இந்த ஆண்டு சிறப்பான முறையில் கொடிகாத்த குமரன் பிறந்தநாள்விழா நடைபெற்றுள்ளது. மேலும் தியாகிகளை கவுரவிக்கும் வகையில் பல்வேறு நினைவகங்களை திறந்து வைத்துள்ளார்.

    கால்நடைப்பராமரிப்பு துறையின் மூலம் கிராமப்புறங்களில் சுமார் 2.50 லட்சம் ஏழை, எளிய, ஆதரவற்ற மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் சுமார் 77 ஆயிரம் பேர் பயனடையவுள்ளனர். கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் 814 டாக்டர்கள் நியமனம் செய்ய 1300 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விரைவில் பரிசீலனை செய்து நியமிக்கப்படுவார்கள்.

    காங்கேயம் இன மாடுகளை பராமரிக்கின்ற வகையில், பவானிசாகர் பகுதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் காங்கேயம் மாட்டின ஆராய்ச்சி நிலையமானது பூமி பூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆராய்ச்சி நிலையத்தில் தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு, நிலங்கள் சமன் செய்து, தீவன பயிர்கள் உற்பத்தி செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    பர்கூர் மற்றும் தாளவாடி பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்க்கப்படும் நாட்டு மாடுகளின் பாலை நல்ல விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

    முதல் அமைச்சர் அறிவித்ததுபோல் நொய்யல் ஆறு சீரமைக்கப்பட்டு ஒரத்து பாளையம் அணை பகுதியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும்.

    இவ்வாறு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார். #UdumalaiRadhakrishnan
    Next Story
    ×