search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் தடைக்கு எதிராக வருகிற 23-ந்தேதி 12 இடங்களில் உண்ணாவிரதம்- விக்கிரமராஜா பேட்டி
    X

    பிளாஸ்டிக் தடைக்கு எதிராக வருகிற 23-ந்தேதி 12 இடங்களில் உண்ணாவிரதம்- விக்கிரமராஜா பேட்டி

    பிளாஸ்டிக் தடைக்கு எதிராக வருகிற 23-ந்தேதி 12 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja

    திருச்சி:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. 11 லட்சம் வணிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில் இந்த உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மாற்ற வேண்டும். பிளாஸ்டிக்கில் எதை தடை செய்ய வேண்டும் என்பதை அரசு எங்களை அழைத்து பேச வேண்டும்.

    ஒரு முறை கூட சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும். ஒரு முறை கூட சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக்கை தடை செய்து விட்டு மறு சுழற்சி முறையை பயன்படுத்த வேண்டும்.

    பிளாஸ்டிக் தடைக்கு எதிராக வருகிற 23-ந்தேதி திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், மதுரை, தஞ்சை, தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், சேலம், கடலூர், வேலூர், கோவை ஆகிய 12 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்திய ரதம் ஒன்று டெல்லியில் இருந்து தமிழகம் வந்து கொண்டிருக்கிறது. அந்த ரதம் வருகிற 23-ந்தேதி சென்னை வருகிறது. அன்றைய தினம் உண்ணாவிரதத்தில் டெல்லி பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.

    மத்திய, மாநில அரசுகள் வணிகர்களுக்கு நெருக்கடியை தந்து கொண்டிருக்கின்றன.

    பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். வருகிற 2019- ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் மாற்று முடிவை எடுத்தால் ஆட்சி மாற்றம் ஏற்படும். பிளாஸ்டிக் தடை தொடர்பாக வணிகர்களை அழைத்துக் கொண்டு முதல்-அமைச்சர், அமைச்சர்களை சந்திக்க உள்ளோம். வியாபாரிகள், தொழிலாளர்களை பாதிக்காத வகையில் அரசின் நியாயமான முடிவுக்கு நாங்கள் துணை நிற்போம். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த பிளாஸ்டிக் விழிப்புணர்வு கூட்டத்தில் விக்கிரமராஜா சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டு பேசினார். வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் முத்துமாணிக்கம், துணை தலைவர் பசுபதி உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #vikramaraja 

    Next Story
    ×