search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வணிகர்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் தமிழக சட்டசபையை முற்றுகையிடுவோம்- விக்கிரமராஜா
    X

    வணிகர்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் தமிழக சட்டசபையை முற்றுகையிடுவோம்- விக்கிரமராஜா

    வணிகர்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்று விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தரநீர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-

    வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றுவது இல்லை. அந்நிய நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் ஈடுபடுகிறது. இதை தடுக்க வேண்டும்.

    நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளில் 5 முறை மத்திய மந்திரிகளை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், தமிழக அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுத்தேன். எங்கள் மனுக்கள் என்ன ஆனது? பத்திரமாக வைத்து இருக்கிறீர்களா? அல்லது குப்பை தொட்டியில் போட்டு விட்டீர்களா?

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. வணிகர்களின் ஓட்டு உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திடமா ஓட்டு கேட்பீர்கள்?

    தமிழ்நாட்டில் ஒரு கோடி வணிக குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பணத்துக்கு ஓட்டுகளை விற்பதில்லை. அதற்கு வியாபாரிகள் துணை போகமாட்டார்கள். எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்று கேட்கிறோம். நாங்கள் எந்த கால கட்டத்திலும் அரசியல் பக்கம் செல்ல மாட்டோம்.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் 23-ந்தேதி உண்ணாவிரதம் இருப்போம். அடுத்த கட்டமாக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். அதன் பிறகும் அரசு அழைத்து பேசாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் ஜோதிலிங்கம், மோகன், ஜெயபால், அமல்ராஜ், ஆதிகுருசாமி, சாமுவேல், ரவி, நிர்வாகிகள் வி.பி.மணி, ராஜ்குமார், அம்பத்தூர் ஹாஜிமுகமது, ஆர்.கே.எம்.துரைராஜன், அய்யார் பவன் அய்யாதுரை, தங்கதுரை, மனோகரன், ராஜேந்திரன், வேலுசாமி, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், பால்ஆசீர், எட்வர்டு, வில்சன், முகமது செரீப், தேசிகன், சின்னவன், அடையாறு துரை, பாஸ்கர், கே.ஏ.மாரியப்பன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இதுபோல் 12 மண்டலங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    Next Story
    ×