search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
    X

    நிர்மலாதேவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள நிர்மலாதேவி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். #NirmalaDeviAudioCase #NirmalaDevi
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அவரிடம் போலீசார் நடத்திய தொடர் விசாரணையின் அடிப்படையில் காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, உதவி பேராசிரியர் முருகன் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு இறுதி விசாரணைக்கு வந்தது. முருகன் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் வாதாடுகையில், நிர்மலாதேவி தான் பேசிய ஆடியோவில், மாணவிகளிடம் நீங்கள் சம்மதித்தால் உயர்மட்டத்தில் இருந்து பணம் கிடைக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்கும் இது வேற லெவல் என பேசி உள்ளார்.

    காமராஜர் பல்கலைக் கழகத்தில் உயர் பதவியில் உள்ள துணைவேந்தர் மற்றும் நிர்மலாதேவியுடன் நெருங்கிய தொடர்புடைய மகளிர் மேம்பாட்டு துறை தலைவர் மற்றும் புத்தாக்க பயிற்சி இயக்குனர் கலைச்செல்வன் ஆகியோர் மீது ஏன் விசாரனை நடத்தி வழக்குப்பதிவு செய்யவில்லை.

    சாதாரண நிலையில் உள்ள முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு பொய்யான வழக்கை பதிந்து உள்ளது. இந்த வழக்கினை நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகிய மூவரையும் வைத்து சி.பி.சி.ஐ.டி. காவல்துறை முடிக்க நினைக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் பல்கலை கழகத்தின் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்கள் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

    மேலும், நிர்மலாதேவி, முருகனுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளை விதிக்கும் எந்த நிபந்தனையையும் ஏற்க தயாராக உள்ளனர்.

    எனவே முருகனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.

    இதற்கு அரசு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் ஏற்று கொண்ட நீதிபதி இளந்திரையன் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். #NirmalaDeviAudioCase #NirmalaDevi
    Next Story
    ×