search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
    X
    திருவள்ளூரில் மருந்து கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

    ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு- மருந்து கடைகள் அடைப்பால் ரூ.50 கோடி வியாபாரம் பாதிப்பு

    ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய கூடாது என்பதை வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மருந்து கடைகளும், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் மருந்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. #MedicalsStrike
    சென்னை:

    இந்தியாமுழுவதும் மருந்து கடை வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 8½ லட்சம் மருந்துகடைகள் ஈடுபட்டுள்ளன.

    தமிழகத்தில் 35 ஆயிரம் மருந்து கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன. அப்பல்லோ உள்ளிட்ட பெரிய மருந்து கடைகளும் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.

    காலை 6 மணி முதல் மாலை 6-மணிவரை அனைத்து மருந்து கடைகளையும் மூடி மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் மட்டும் 6000 மருந்து கடைகள் மூடப்பட்டன.

    தமிழகத்தில் விற்பனையாகும் மொத்த மருந்துகளில் பாதி விற்பனை சென்னையில் மட்டுமே நடைபெறுகிறது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த வேலை நிறுத்தத்துக்கு மொத்த விற்பனையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆதரவு கொடுத்துள்ளனர். இதனால் சென்னையில் அனைத்து பகுதியிலும் மருந்துகடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    வேலை நிறுத்தம் குறித்து மருந்து வணிகர்கள் சங்க சென்னை மாவட்ட தலைவர் செல்வகுமார் கூறியதாவது:-

    வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு வேண்டுமானால் ஆன்லைன் மருந்து விற்பனை சாத்தியமாகும். ஆனால் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு இது பொருந்தாது.

    அதற்கான கட்டமைப்பு வசதி இந்தியாவில் கிடையாது. இது தவறான வழி முறையாகும். கார்பரேட் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்கப்படுத்தும் வகையில் ஆன்லைன் மருந்து வணிகத்தை தீவிரப்படுத்தி வருகிறது.

    மருந்து தயாரிப்பில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஏதாவது தவறு இருந்து கண்டு பிடிக்காவிட்டால் அதனை மொத்த வினியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மூலம் திரும்ப பெற முடியும்.

    ஆனால் ஆன்லைன் விற்பனையில் ஒருமுறை விற்ற மருந்தை திரும்ப பெற முடியாது. மருந்து கட்டுப்பாடு சட்டங்களை ஆன்லைன் வர்த்தகம் பின்பற்ற முடியாது. இது முற்றிலும் மருந்து கட்டுப்பாடு சட்டத்துக்கு எதிரானது.

    ஆன்லைன் மருந்து விற்பனை அதிகரித்து வருவதால் சுமார் 10 லட்சம் பேர் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் ஆன்லைன் விற்பனையை மத்திய அரசு தடுக்க வேண்டும்.


    இன்றைய ஒரு நாள் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ரூ.50 கோடி வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மருந்து கடை வணிகர்கள் சார்பாக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு மருந்து வணிகர் சங்க செயலாளர் கே.கே.செல்வன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1027 மருந்து கடைகள் உள்ளன. இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் காஞ்சிபுரம் காந்திரோடு பெரியார் தூண் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் நிர்வாகி சத்திய மூர்த்தி, ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 1984 மருந்து கடைகளும் இன்று மூடப்பட்டது. மருந்து வணிகர்கள் சங்கத்தினர் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வீரா திரையரங்கம் வரை ஊர்வலமாக சென்றனர். அப்போது ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க கூடாது என்று கோ‌ஷமிட்டனர்.  #MedicalsStrike
    Next Story
    ×