search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே போலீஸ் துரத்தியதில் மரத்தில் கார் மோதி கொள்ளையன் பலி
    X

    புதுக்கோட்டை அருகே போலீஸ் துரத்தியதில் மரத்தில் கார் மோதி கொள்ளையன் பலி

    புதுக்கோட்டை அருகே போலீஸ் துரத்தியதில் மரத்தில் கார் மோதி கொள்ளையன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident

    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை அடுத்த ஒடுக்கூரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 35). இவர் மீது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை உள்பட ஏராளமான குற்ற வழக்குகள் உள்ளது.

    கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள குளத்தூரில் உள்ள சிட்டி யூனியன் வங்கியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி கோபால கிருஷ்ணனை கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை விராலிமலை சாலை ஆம்பூர்பட்டி நால்ரோடு பகுதியில் சாலை யோரத்தில் உள்ள மரத்தில் கார் ஒன்று மோதி கிடப்பதாகவும், அதில் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாகவும் மாத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது கோபாலகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.

    பின்னர் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். போதை மயக்கத்தில் காரை ஓட்டி சென்றதால் விபத்தில் சிக்கி கோபாலகிருஷ்ணன் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே ஜாமீனில் வெளியே வந்த கோபால கிருஷ்ணன் மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கீரனூரில் நடந்த கொள்ளை தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்துள்ளனர்.

    நேற்று ஆம்பூர்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அந்த வழியாக கோபாலகிருஷ்ணன் காரில் வரவே அவரை பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்காமல் காரை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் தங்களது வாகனத்தில் அவரை விரட்டி சென்றுள்ளனர். ஆம்பூர் பட்டி நால்ரோடு பகுதியில் செல்லும் போது கோபால கிருஷ்ணனின் கார் நிலை தடுமாறி மரத்தில் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது.

    அதில் பலத்த காயமடைந்து கோபாலகிருஷ்ணன் இறந்துள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதனை போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். இதனால் கோபாலகிருஷ்ணன் இறந்தது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் காருக்குள் ஆண்கள் அணியக்கூடிய ஒரு ஜோடி செருப்பு கிடந்துள்ளது. இதனால் கோபால கிருஷ்ணனுடன் அவரது கூட்டாளி ஒருவரும் வந்துள்ளார். கார் விபத்தில் சிக்கியதும் லேசான காயத்துடன் அவர் அங்கிருந்து தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது. அவர் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர்.

    பலியான கோபாலகிருஷ்ணனுக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.மேலும் அவருக்கு ஒடுக்கூரில் மிகப்பெரிய வீடு மற்றும் கட்டிடங்கள் உள்ளது. போலீசாரால் தேடப்பட்டு வந்த கொள்ளையன் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×