search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர் மீது பாலியல் புகார் - திருச்சி கல்லூரிக்கு செல்ல மறுத்த மாணவிக்கு எதிராக போராட்டம்
    X

    பேராசிரியர் மீது பாலியல் புகார் - திருச்சி கல்லூரிக்கு செல்ல மறுத்த மாணவிக்கு எதிராக போராட்டம்

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறி பின்னர் திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்ட மாணவி, அங்கு செல்ல மறுத்து பழைய கல்லூரிக்கு சென்ற நிலையில் அவருக்கு எதிராக மாற்ற மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #ChennaiStudentharassment #AgriCollege

    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.

    மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். இதையடுத்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக் கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழு முதற்கட்ட விசாரணையோடு மாணவி புகாரை கிடப்பில் போட்டுவிட்டனர்.

    இதையடுத்து, சமீபத்தில் திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவி திடீரென மாற்றப்பட்டார். அதேபோல் பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியைகள் மைதிலி திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கும், புனிதா கோவை வேளாண் கல்லூரிக்கும் மாற்றப்பட்டனர்.


    இந்த நிலையில், திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்ட ஆணையை மாணவி ஏற்க மறுத்துவிட்டார். நீதி கிடைக்கும் வரை கல்லூரியை விட்டு வெளியேற மாட்டேன் என திட்டவட்டமாக மாணவி கூறினார். கல்லூரிக்கு தினமும் சென்றார்.

    ஆனால், வகுப்பறைக்குள் மாணவி சென்ற உடன் மற்ற மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு பேராசிரியர், பேராசிரியைகள் வெளியில் சென்றுள்ளனர். இன்று காலை கல்லூரிக்கு சென்ற மாணவிக்கு எதிராக மாணவர்கள், மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

    இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், தவறு இழைத்தவர்களை தண்டிக்காமல் என்னை வேறு கல்லூரிக்கு மாற்றுவது, எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்களை தப்பிக்க வைக்கும் முயற்சி.

    நான் திருவண்ணாமலை கல்லூரியில் தான் தொடர்ந்து படிப்பேன். எனக்கு எதிராக போராட்டம் தூண்டி விடப்படுகிறது. சில மாணவர்கள் என்னை கிண்டலடிக்கும் விதமாக ‘கேலடி கண்மணி.... வெல்லும் எங்கள் போராட்டம்’ என கோ‌ஷமிடுகின்றனர். இது கண்டிக்கத்தக்க செயல். எனக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். வேறு கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்றார்.  #ChennaiStudentharassment #AgriCollege

    Next Story
    ×