search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் கலப்பு காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி படுகொலை
    X

    நாகர்கோவிலில் கலப்பு காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி படுகொலை

    கலப்பு காதல் திருமணம் செய்த வாலிபரை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழ சரக்கல் விளையை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). இவரது மனைவி பெயர் சகானா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். செல்வமும் சகானாவும் ஒருவரைஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அவர்கள் அதை மீறி திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு செல்வம் கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றார். பிறகு அவர் நள்ளிரவு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் தனது வீட்டை நெருங்கும் போது அவரை ஒரு கும்பல் வழிமறித்தது.

    அதை பார்த் ததும் சுதாரித்துக் கொண்ட செல்வம் தனது மோட்டார் சைக்கிளை திருப்பிக் கொண்டு அந்த கும்பலிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரை தப்பவிடாமல் மடக்கிப்பிடித்தது. பிறகு தங்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் செல்வத்தின் கழுத்து மற்றும் உடலின் பல இடங்களில் வெட்டு விழுந்தது.

    இதனால் நிலை தடுமாறிய அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவர் மீது மோட்டார் சைக்கிள் விழுந்து அமுக்கியதால் அவரால் அந்த கும்பலிடம் இருந்து தப்ப முடியவில்லை. அவரை தீர்த்துகட்டிய அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது.

    செல்வம் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அங்கு திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதனர்.

    மேலும் இந்த கொடூர கொலை பற்றி கோட்டார் போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். செல்வத்தின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை பற்றி கோட்டார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது செல்வத்தின் நண்பர் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் தாக்கி உள்ளனர். நண்பரை தாக்கியவர்களை செல்வம் தட்டிக்கேட்டார். இதனால் செல்வத்திற்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த முன்விரோதத்தில் செல்வத்தை அவர்கள் தீர்த்துகட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். மேலும் பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


    செல்வம் கொலை தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்ய 2 தனி போலீஸ்படையும் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொலை நடந்த பகுதியில் மோதல் நடைபெறாமல் இருக்க அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர். 

    Next Story
    ×