search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் அருகே விவசாயி கொடூர கொலை
    X

    பெரம்பலூர் அருகே விவசாயி கொடூர கொலை

    பெரம்பலூர் அருகே விவசாயி தலையில் பாறாங்கல்லை போட்டு மர்மநபர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மண்டபம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 48), விவசாயி. இவரது மனைவி ராஜகுமாரி. இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகளுக்கும், ஒரு மகனுக்கும் திருமணமாகி விட்டது. ஒரு மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பாண்டியனுக்கு சொந்தமாக அப்பகுதியில் 3½ ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு கொட்டகை அமைத்து அதில் அவரது தாய் அஞ்சலையுடன் வசித்து வந்தார்.

    நேற்றிரவு பாண்டியன், தாயுடன் சேர்ந்து கொட்டகையில் படுத்துதூங்கினார். இன்று அதிகாலை அங்கு சென்ற மர்மகும்பல் , கொட்டகைக்குள் புகுந்து அஞ்சலையை சரமாரி தாக்கினர். பின்னர் தூங்கி கொண்டிருந்த பாண்டியனின் தலையில் பாறாங்கல்லை தூக்கி போட்டனர். இதில் அவர் தூங்கிய நிலையிலேயே தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மேலும் ஆத்திரம் தீராத கும்பல் பாண்டியனின் முகத்தை சிதைத்து விட்டும் சென்றனர்.

    இதனிடையே அஞ்சலையின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி பொது மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பாண்டியன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, உடனடியாக குன்னம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை பார்வையிட்டனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அஞ்சலையையும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பாண்டியனை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர் என்று தெரியவில்லை. கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்காக சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. நாய் கொட்டகையில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சிறிது தூரம் வரை சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கணவன்-மனைவி பிரச்சனையில் இந்த கொலை சம்பவம் நடந்ததா? அல்லது வயல் பிரச்சனையில் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்திற்கு பெரம்பலூர் எஸ்.பி. திஷாமித்தலும் சென்று விசாரணை நடத்தினார். விவசாயி கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×