search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைவர் பொறுப்பை ஏற்றாலும் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் - முக ஸ்டாலின்
    X

    தலைவர் பொறுப்பை ஏற்றாலும் உங்களில் ஒருவனாக பணியாற்றுவேன் - முக ஸ்டாலின்

    என்ன தான் பல பொறுப்புகளை ஏற்றாலும் ஏன் தலைவர் பொறுப்பை வகித்தாலும் என்றும் உங்களின் ஒருவனாக பணியாற்றுவேன் என்று தலைவாசலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். #MKStalin #DMK
    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்றிரவு சேலத்துக்கு வந்தார். மாவட்ட எல்லையான தலைவாசலில் அவருக்கு செண்டை மேளம் முழங்க, வான வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், முன்னாள் அமைச்சரும், தேர்தல் பணிக்குழு செயலாளருமான டி.எம்.செல்வகணபதி உள்பட நிர்வாகிகள் திரளாக பங்கேற்று வரவேற்பு அளித்தனர்.



    மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி தலைவாசல் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர். பின்னர் அவர்களை பார்த்து உற்சாகமாக கையசைத்த மு.க.ஸ்டாலின் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பேசியதாவது:-

    தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாளை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். தமிழகத்தில் ஒரு எடுபிடி ஆட்சி நடக்கிறது. மாநில உரிமைகளை பறிகொடுக்கும் மத்திய அடிமை ஆட்சியை பற்றி மக்களிடம் எடுத்து செல்லும் மாபெரும் ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்டத்தில் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க நானும் வந்துள்ளேன்.

    பல்வேறு பொறுப்புகளை ஏற்ற நிலையில் சேலம் வந்திருக்கிறேன் அதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் தி.மு.க. தலைவராக பொறுப்பேற்று முதன் முதலாக சேலம் மாவட்டத்துக்கு வந்த எனக்கு உற்சாகமளித்து ஊக்கத்துடன் நீங்கள் வரவேற்பு அளித்துள்ளீர்கள். இது இன்னும் சிறப்பாக பணியாற்று என்று என்னை ஊக்கப்படுத்துவதாக இருந்தது.

    என்ன தான் பல பொறுப்புகளை ஏற்றாலும் ஏன் தலைவர் பொறுப்பை வகித்தாலும் என்றும் உங்களின் ஒருவனாக பணியாற்றுவேன் என்று பொதுக்குழுவில் அளித்த அதே உறுதியை தான் இங்கும் தருகிறேன்.

    எப்படி சிறப்பான வரவேற்பு அளித்தீர்களோ? அதே போல நாளை (இன்று) நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கும், எழுச்சியோடும், உணர்ச்சியோடும், உத்வேகத்தோடும் அனைவரும் வரவேண்டும். உங்களை அங்கு காண காத்திருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #MKStalin #DMK
    Next Story
    ×