search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவில்பட்டியில் கனமழை - மேலும் ஒரு இடத்தில் மின்கம்பி அறுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
    X

    கோவில்பட்டியில் கனமழை - மேலும் ஒரு இடத்தில் மின்கம்பி அறுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு

    கோவில்பட்டியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மேலும் ஒரு இடத்தில் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் ரெயில் போக்குவரத்து 2-வது நாளாக பாதிக்கப்பட்டது. #TrainService
    கோவில்பட்டி:

    கோவில்பட்டி பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தின் மேல் சென்ற உயர் அழுத்த மின்கம்பி திடீரென்று அறுந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்சார ரெயில்களை இயக்க முடியவில்லை.

    இதுகுறித்து கோவில்பட்டி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக ரெயில்வே மெக்கானிக்கல் பிரிவு ஊழியர்கள் விரைந்து சென்று, அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நெல்லையில் இருந்தும் ரெயில்வே பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணியில் ஈடுபட்டார்கள். இதனால் கோவில்பட்டி வழியாக மின்சார ரெயில்கள் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

    நெல்லையில் இருந்து மும்பை தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ், நெல்லையில் இருந்து ஜம்முதாவி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய இரு ரெயில்களும் கோவில்பட்டி ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்ப‌ட்டன. சென்னையில் இருந்து குருவாயூர் வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூர் ரெயில் நிலையத்திலும், கோவையில் இருந்து நாகர்கோவில் வந்த ரெயில் நள்ளி ரெயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன. நெல்லையில் இருந்து இரவில் சென்னைக்கு புறப்பட்டு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வாஞ்சி மணியாச்சியிலும், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கடம்பூர் ரெயில் நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன.

    மேலும் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து பெங்களூரு செல்லும் எக்ஸ்பிரஸ், நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அந்த ரெயில்களில் பயணம் செய்த பயணிகள் தவிப்புக்கு ஆளானார்கள்.

    இதனிடையே கோவில்பட்டியில் அறுந்து கிடந்த மின் கம்பியை ஊழியர்கள் வெகுநேர போராட்டத்துக்கு பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு சரிசெய்தனர். இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் அந்த வழியாக மின்சார ரெயில் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடத்தினர். அதைத்தொடர்ந்து ஜம்முதாவி எக்ஸ்பிரஸ், மும்பை தாதர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அடுத்தடுத்து புறப்பட்டு சென்றன. மும்பை தாதர் ரெயில் கோவில்பட்டியில் இருந்து டீசல் என்ஜின் மூலமாக இழுத்து செல்லப்பட்டு அங்கிருந்து வழக்கமான மின்சார ரெயிலாக புறப்பட்டு சென்றது.

    பின்பு நெல்லை, மணியாச்சி, கடம்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டன. சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ், நெல்லை-ஈரோடு-மயிலாடுதுறை இணைப்பு பயணிகள் ரெயில் ஆகியவை நள்ளிரவில் நெல்லைக்கு வந்தன. இந்த ரெயில்களுக்காக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும் தவிப்புக்குள்ளானார்கள்.

    இரவில் அனைத்து ரெயில்களுமே தாமதமாக சென்றதால் நெல்லைக்கு பல்வேறு இடங்களில் இருந்து வந்த ரெயில்களும் தாமதமாக வந்தன. மாலை 5.30 மணிக்கு நெல்லை வரவேண்டிய ஈரோடு, மயிலாடுதுறை பயணிகள் ரெயில் 11.30 மணிக்கு நெல்லை வந்தது. இன்று அதிகாலை 4 மணிக்கு நெல்லை வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7 மணிக்கு நெல்லை வந்தது.

    காலை 6.10 மணிக்கு வரவேண்டிய செந்தூர் எக்ஸ்பிரஸ் 9 மணிக்கும், 6.15 மணிக்கு நெல்லை வரவேண்டிய பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் 9.30 மணிக்கும், 7.30 மணிக்கு வரக்கூடிய நெல்லை எக்ஸ்பிரஸ் 10 மணிக்கும் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு வந்தது. காலை 8 மணிக்கு வரவேண்டிய குருவாயூர் ரெயில் 10 மணிக்கு நெல்லைக்கு வந்தது.

    ரெயில்கள் தாமதமானதால் அதில் பயணம் செய்து வந்த பயணிகளும், ரெயில் நிலையத்தில் காத்திருந்தவர்களும் கடும் தவிப்புக்குள்ளானார்கள். குறித்த நேரத்தில் உரிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அலுவலகங்களுக்கு செல்பவர்களும் கடும் சிரமத்துக்குள்ளானார்கள்.

    இதனிடையே இன்று காலை கோவில்பட்டி-சாத்தூர் வழித்தடத்தில் கோவில்பட்டியில் இருந்து சிறிது தொலைவில் மேலும் ஒரு மின்கம்பி அறுந்து விழுந்தது. இதுபற்றி கோவில்பட்டி ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எலக்ட்ரிக்கல் பிரிவு பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து மின் கம்பியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதன் காரணமாக கோவில்பட்டிநோக்கி வந்து கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் சாத்தூர் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்பு அந்த ரெயில் டீசல் என்ஜின் மூலமாக இயக்கப்பட்டு கோவில்பட்டியை வந்தடைந்தது. பின்னர் 11 மணியளவில் நெல்லைக்கு வந்தது. 2-வது நாளாக ரெயில்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். #TrainService
    Next Story
    ×