search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 19-வது மதகில் விரிசல் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 19-வது மதகில் விரிசல் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    முக்கொம்பு அணையில் 19-வது மதகிலும் விரிசல்

    முக்கொம்பு அணையில் 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், இந்த மதகு பகுதியிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். #MukkombuDam
    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முக்கொம்புவில் உள்ள கொள்ளிடம் அணை கடந்த 22-ந் தேதி இரவு உடைந்தது. 45 மதகுகளில் 6 முதல் 14 வரை உள்ள 9 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட் டன. இதனால் கொள்ளிடத்தில் தண்ணீர் வீணாக வெளியேறியது.

    இதை தடுக்க ரூ.95 லட்சம் மதிப்பில் உடைந்த பகுதியில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. தண்ணீரின் வேகம் காரணமாக சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. முதற்கட்டமாக மதகுகள் உடைந்த பகுதி வழியாக ஆற்றில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் பணி முடிந்துள்ளது.

    மதகுகள் உடைந்த இடத்தில் 125 மீட்டர் இடைவெளியில் பாறாங்கற்கள் கொண்டு அடைக்கப்பட்டது. தற்போது பாறாங்கற்கள் மீது கிராவல் மண் நிரப்பப்பட்டது. ஆனாலும் பெரிய மற்றும் சிறிய பாறாங்கற்களுக்கிடையே உள்ள இடைவெளி வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

    இதனை தடுப்பதற்காக அணையின் மேற்குப்பகுதியில் மணல் மூட்டைகள், வாழை சருகுகள், கரும்பு சக்கைகள், வைக்கோல் கொண்டு வரப்பட்டு துளைகளுக்குள் செலுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனாலும் தண்ணீர் கசிந்து வருவதால் பிளாஸ்டிக் தார்ப்பாய்களை கொண்டு அடைக்கும் பணியில் பொதுப் பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    மதகு உடைந்த பகுதி 20 அடி ஆழமானது. 260 மீட்டர் நீளத்துக்கு மணல் மூட்டைகள் அடுக்கி தடுப்புகள் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இன்னும் 75 முதல் 80 மீட்டர் வரை மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வடகரை மதகு பகுதியிலிருந்து 19-வது மதகிலிருந்து தெற்கு நோக்கி மணல் முட்டைகளை அடுக்கும் பணி நடந்து வந்தது. தண்ணீரின் வேகத்தால் பணிகள் பாதிக்கப்பட்டது. தற்போது வடகரை பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருகிறது. 19-வது மதகின் மேல் பகுதியில் தடுப்பு சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அந்த மதகு உடையும் அபாயத்தில் உள்ளது. அப்பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அசம்பாவிதத்தை தவிர்க்க 19-வது மதகு பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், அணையின் மற்ற மதகுகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். 19-வது மதகில் விரிசல் இல்லை. அப்படி எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் வகையில் அப்பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தினமும் அணையை பராமரித்து வருகிறோம்.

    உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் ஓரளவு நிறைவடைந்தாலும் சிறிய இடைவெளி வழியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கரும்பு சக்கை, கிராவல் மண் கொண்டும் அடைத்து வருகிறோம். தொடர்ச்சியாக பாறையின் இடுக்குகளில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்க கான்கிரீட் வைத்து பூச்சுகள் பூசப்பட உள்ளது.

    தண்ணீர் வெளியேறுவதை நிறுத்திவிட்டாலே 99 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும். புதிய பாலம் கட்ட தேர்வு செய்த இடத்தில் ஆய்வு பணிகள் முடிந்துவிட்டது. திட்ட மதிப்பீடு அரசுக்கு விரைவில் அனுப்பப்படும். விவசாய காலம் முடியும் வரை கண்காணிக்கப்படும். பின்னர் அரசு அனுமதி கிடைத்து நிதி ஒதுக்கப்பட்டதும் டெண்டர் விடப்பட்டு 2 அல்லது 3 மாதத்தில் புதிய பாலம் கட்டுமான பணிகள் துவங்கும்.

    அதுவரை டெல்டா மாவட்டங்களுக்கு பாசனம் பாதிக்காத வகையில் கண்காணித்து வருகிறோம். தற்போது காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரியிலிருந்து கொள்ளிடத்துக்கு தண்ணீர் பாய்வது 3 நாட்களுக்கு முன்பே தடுக்கப்பட்டு விட்டது. தற்போது கொள்ளிடத்தில் ஆயிரம் கனஅடி நீரே திறக்கப்பட்டுள்ளது என்றனர்.  #MukkombuDam


    Next Story
    ×