search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசிரியர்கள் இல்லாததால் கல்லூரி கல்வித்தரம் சீரழிந்து வருகிறது - ராமதாஸ் அறிக்கை
    X

    ஆசிரியர்கள் இல்லாததால் கல்லூரி கல்வித்தரம் சீரழிந்து வருகிறது - ராமதாஸ் அறிக்கை

    ஆசிரியர்கள் இல்லாததால் கல்லூரி கல்வித்தரம் சீரழிந்து வருகிறது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Ramadoss

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆண்டுக்கு ஆண்டு குறைந்த ஊதியத்தில் கவுரவ விரிவுரையாளர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அமர்த்தும் தமிழக அரசு, மீதமுள்ள கணிசமான பணியிடங்களை நிரப்பாமல் காலியாக வைத்திருக்கிறது.

    இப்போதும் கூட அரசு கல்லூரிகளில் 2640 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதற்கு இணையான எண்ணிக்கையில் கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்கும்படி கல்லூரி கல்வி இயக்குனர் பரிந்துரைத்த நிலையில், 1883 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க மட்டுமே ஆணையிடப்பட்டுள்ளது.

    இவை தவிர கணக்கில் கொண்டுவரப்படாத காலியிடங்கள் ஏராளமாக உள்ளன. 2011-ம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து 2015-16-ம் ஆண்டு வரை 953 புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இவற்றை கற்பிப்பதற்காக 1924 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.

    மேலும் நடப்பாண்டில் 263 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. அவற்றை கையாளுவதற்காக 693 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 270 பணியிடங்கள் நடப்பாண்டிலேயே நிரப்பப்பட வேண்டும். இவை அனைத்தையும் கணக்கில் சேர்த்தால், 2640 காலியிடங்கள், புதிதாக உருவாக்கப்பட்ட 2617 பணியிடங்கள் என மொத்தம் 5257 காலியிடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

    ஆனால், கடந்த 2015-ம் ஆண்டில்1010 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. இவை கூட 2012-13 -ம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட புதிய பணியிடங்கள் மட்டுமே. மீதமுள்ள காலியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    2013-14-ம் ஆண்டு முதல் இப்போது வரை ஏற்படுத்தப்பட்ட 1607 புதிய பணியிடங்கள், 2640 காலியிடங்கள் என 4247 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் இன்னும் நிரப்பபடவில்லை. நடப்பாண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 693 பணியிடங்களில் 423 இடங்களை அடுத்தடுத்த ஆண்டுகளில் நிரப்பிக் கொள்ள முடியும் என்பதால், அவற்றை கழித்தாலும் கூட கிட்டத்தட்ட 3800 காலியிடங்கள் உள்ளன.

    இவை அரசு கல்லூரிகளின் ஒட்டுமொத்த பணியிடங்களில் 30 விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். 30 சதவீதம் காலியிடங்களை வைத்துக் கொண்டு அரசு கல்லூரிகளில் எப்படி தரமான கல்வி தர முடியும்?அரசு கல்லூரிகளில் 1883 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் கூட உயர்கல்விச் சீரழிவை தடுக்க முடியாது.

    கவுரவ விரிவுரையாளர்கள் திறமையானவர்கள், கடமை உணர்வு கொண்டவர்கள் என்றாலும் கூட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அவர்களால் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை முழுமையாக நிரப்ப முடியாது.

    காலியிடங்கள் அனைத்தையும் நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் மூலம் நிரப்பினால் மட்டும் தான் கல்லூரிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்த முடியும். கவுரவ விரிவுரை யாளர்களையே தகுதி அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களாக நியமிப்பதன் மூலம் கல்வித் தரத்தை உயர்த்த முடியும்.

    உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், தரமான கல்வி வழங்குவதில் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த நிலையை மாற்றி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வித் தரத்தை மேம்படுத்த காலியாக உள்ள அனைத்து உதவிப் பேராசிரியர் பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Ramadoss

    Next Story
    ×