search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேராசிரியர் மீது பாலியல் புகார் மாணவி - 2 பேராசிரியைகள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்
    X

    பேராசிரியர் மீது பாலியல் புகார் மாணவி - 2 பேராசிரியைகள் வேறு கல்லூரிகளுக்கு மாற்றம்

    உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் 2 பேரும் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டனர். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அடுத்த வாழவச்சனூரில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதே கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் தங்கபாண்டியன் என்பவர் தொடர்ந்து 7 மாதங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த மாணவி புகார் கூறினார்.

    மாணவிகள் தங்கியுள்ள விடுதியில் வார்டன்களாக இருந்த பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் தங்கபாண்டியனுக்கு ஆதரவாக செயல்பட்டனர். பேராசிரியைகள் பேசியதாக மாணவி ஆடியோக்களையும் வெளியிட்டார். சர்ச்சை வெடித்ததால் பேராசிரியர் தங்கபாண்டியன் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    பாலியல் புகார் குறித்து ஏ.டி.எஸ்.பி. வனிதா தலைமையிலான போலீசார் மற்றும் கோவை வேளாண் பல்கலைக்கழக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் சாந்தி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தேர்வுகள் முடிந்து இந்த வாரம் திங்கட்கிழமை வகுப்புகள் தொடங்கியது.

    பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி கல்லூரிக்கு சென்றார். வகுப்பறைக்குள் அந்த மாணவி சென்றவுடன், சக மாணவ-மாணவிகளை அழைத்துக் கொண்டு பேராசிரியைகள் கல்லூரியை விட்டு வெளியே சென்றனர். இதையடுத்து, மாணவியை கல்லூரி நிர்வாகம் வலுகட்டாயமாக வெளியேற்றியது.

    தொடர்ந்து, இந்த வாரம் முழுவதும் மாணவியை வகுப்பறைக்குள் விடாமல் பேராசிரியர்கள் தடுத்தனர். மேலும், தங்களால் அந்த மாணவிக்கு பாடம் நடத்த முடியாது, வேறு கல்லூரிக்கு அவரை மாற்றி விடுங்கள் என்று பேராசிரியர்கள் கல்லூரி முதல்வரிடம் கூறினர். இதற்கு மாணவி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

    பாலியல் புகார் குறித்து விசாரணை நடைபெறும் நேரத்தில் நான் வேறு கல்லூரிக்கு எப்படி செல்ல முடியும். விசாரணைக்கு என்னால் ஆஜராக முடியாமல் போகும். நான் தொடர்ந்து இதே கல்லூரியில் தான் படிப்பேன் என்று மாணவி திட்டவட்டமாக கூறினார். மாணவிக்கு ஆதரவாக வாழவச்சனூர் கிராம மக்களும் பேராசிரியர்களுக்கு எதிராக போர்கொடி தூக்கினர்.

    குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர், பேராசிரியைகளை தப்பிக்க வைக்க மாணவியை கல்லூரியில் இருந்து நீக்க முயற்சி செய்வதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர். இதற்கிடையே, கல்லூரி வளாகத்திற்குள் மாணவி வந்து செல்லும் போது அவரது நடவடிக்கையை ஒரு சில பேராசிரியர்கள் செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்தனர்.

    இதுதொடர்பாகவும் போலீசாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார். இந்த நிலையில், பாலியல் புகார் கூறிய மாணவி திடீரென திருச்சி நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ஒழுங்கு நடவடிக்கை குழு நடத்திய விசாரணை அடிப்படையில் மாணவியை திருச்சி கல்லூரிக்கு மாற்றியுள்ளதாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கல்லூரியில் இருந்து உடனடியாக வெளியேறி திருச்சி கல்லூரியில் சேருமாறு மாணவிக்கு அனுப்பப்பட்டுள்ள உத்தரவு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோரும் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு பேராசிரியை மைதிலியும், கோவை வேளாண் கல்லூரிக்கு மற்றொரு பேராசிரியையான புனிதாவும் மாற்றப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவி கூறுகையில், நான் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் இருந்து வேறு எந்த கல்லூரிக்கு மாற்றினாலும் செல்லமாட்டேன். பாலியல் தொல்லை கொடுத்த உதவி பேராசிரியர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்களை தப்பிக்க வைப்பதற்காகவே என்னை வேறு கல்லூரிக்கு மாற்றி உள்ளனர்.

    தவறு இழைக்காத நான் ஏன் வேறு கல்லூரிக்கு செல்ல வேண்டும். தவறு செய்த பேராசிரியர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை போராடுவேன் என்று மாணவி கூறினார். #ChennaiStudentharassment #AgriCollege

    Next Story
    ×