search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரியில் மூழ்கி பலியான பாலமுருகனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
    X
    வீராணம் ஏரியில் மூழ்கி பலியான பாலமுருகனின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    வீராணம் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி மரணம்

    காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாகரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38). கூலிதொழிலாளி.

    பாலமுருகன் தினமும் காலையில் வீராணம் ஏரியில் குளித்து விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலை பாலமுருகன் வீராணம் ஏரியில் குளிப்பதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்றார். பின்னர் வீராணம் ஏரியில் குளித்தார். அப்போது திடீரென பாலமுருகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கரைக்கு திரும்ப முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    அவரின் உடல் ஏரியில் மிதந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி காட்டுமன்னார்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஏரியில் பிணமாக மிதந்த பாலமுருகனின் உடலை போலீசார் வெளியே மீட்டனர். அவரது உடலை பார்த்து மனைவி ரமா மற்றும் மகன் சந்தோஷ், மகள் சந்தியா கதறி அழுதனர். இது பார்ப்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

    இதையடுத்து பாலமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×