search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக ஆதரவு இல்லாமல் இனிமேல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
    X

    அதிமுக ஆதரவு இல்லாமல் இனிமேல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

    அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் இனிமேல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #RajendraBalaji
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

    விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற அரசு உதவிகள் வழங்கும் விழா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை- எளிய, பாட்டாளி மக்கள், தெழிலாளர்கள் அனைவரும் முன்னேறும் வகையில் மக்கள் நலனை பேணும் வகையில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தினார்.

    தற்பேது ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலப்பணி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதற்கு எடுத்துக் காட்டுதான் இங்கே நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.

    இந்த விழாவில் ஓய்வூதியம், உழவர் பாதுகாப்பு திட்டம், இலவச வீட்டுமனை, விபத்து நிவாரணம், வேளாண்மை மானியம் போன்ற மக்களுக்கு பயன் பெறக்கூடிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் அரசாக மக்கள் ஏற்றுக்கொண்ட அரசாக அ.தி.மு.க. அரசு விளங்கி வருகிறது.

    இந்த அரசின் சாதனைகளை யாரும் எளிதில் மறைத்துவிட முடியாத அளவுக்கு மக்கள் மனதில் அ.தி.மு.க. அரசின் சாதனைகள் நிலைத்து விட்டன. தமிழகத்தில் இன்னும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சி புரியும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

    இப்போது எங்கள் கவனம் எல்லாமே டெல்லிதான். இனி மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அப்படி எங்கள் ஆதரவோடு அமையும் ஆட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் 10 மந்திரி பதவிகளை கேட்போம்.

    ஜெயலலிதா பெருந்தன்மையோடு மத்தியில் அமைந்த அரசுகளுக்கு ஆதரவு கொடுத்தார். மத்தியில் அமையும் எந்த அரசும் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் அரசாக விளங்கும் வகையில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. புதிய வியூகம் வகுக்கும்.

    தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் நடைபெறும் சாதனை திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். மக்களும் அ.தி.மு.க.விற்கு தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #ADMK #TNMinister #RajendraBalaji
    Next Story
    ×