search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    7 முறை ஜாமீன் மறுப்பால் 130 நாட்களாக சிறைவாசம் அனுபவிக்கும் நிர்மலாதேவி
    X

    7 முறை ஜாமீன் மறுப்பால் 130 நாட்களாக சிறைவாசம் அனுபவிக்கும் நிர்மலாதேவி

    கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கைதான நிர்மலா தேவி 7 முறை ஜாமீன்கோரி அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் 130-வது நாளாக சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi
    மதுரை:

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் உதவி பேராசிரியை நிர்மலா தேவி கூட்டு சதியில் ஈடுபட்டது உண்மை என்று விசாரணை அதிகாரி ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி கல்லூரி மாணவிகள் 4 பேரை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்ப சாமி ஆகியோரும் சிறையில் உள்ளனர்.

    இதனிடையே இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களிடம் விசாரணை நடத் தினர். நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு ஆவணங்களும் சேகரிக்கப்பட்டன.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிக்கி இருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக ஓய்வு பெற்ற அதிகாரி சந்தானம் தலைமையில் விசாரணை நடத்த தமிழக கவர்னர் உத்தரவிட்டார்.

    அவர் தனது அறிக்கையை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்து விட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த கணேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த புகாரை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணை குழுவில் டி.ஐ.ஜி. பதவிக்கு இணையான பெண் அதிகாரியை கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி தகில்ரமணி, குலுவாடி ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லாவண்யா பதில் மனு தாக்கல செய்தார்.

    கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக எழுந்த புகாரில் அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டன.

    மேலும் நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேர் பேசிய செல்போன் உரையாடல்கள் சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அவர்கள் கல்லூரி மாணவிகளை ஆசைவார்த்தை காட்டி பாலியலுக்கு அழைத்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. மேலும் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் ஈடுபடுத்த நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரும் கூட்டு சதியில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரும் மீதும் இந்திய தண்டனை சட்டம் 370(3) மற்றும் அதன் உட்பிரிவான 370(1)(ஏ), 120(பி), 354 (ஏ), 5(1)(ஏ), பெண்களை தவறான வழியில் வழி நடத்துவதை தடுக்கும் சட்டப்பிரிவு 4 மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை இதற்கென தவறாக பயன் படுத்துவதை தடுக்கும் சட்டப்பிரிவான 67-ன் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நிர்மலாதேவி கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் பேசிய செல்போன் ஆடியோ உரையாடல்கள் மற்றும் உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடம் நிர்மலாதேவி பேசிய உரையாடல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் 16-ந்தேதி கைதான நிர்மலா தேவி 7 முறை ஜாமீன்கோரி விருதுநகர் மாவட்ட கோர்ட்டு, விருதுநகர் 2-வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே அவர் 130-வது நாளாக சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #NirmalaDevi

    Next Story
    ×