search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்களை போராட தூண்டியது யார்? - பேராசிரியர்களின் செல்போன்கள் ஆய்வு
    X

    மாணவர்களை போராட தூண்டியது யார்? - பேராசிரியர்களின் செல்போன்கள் ஆய்வு

    பாலியல் புகார் கூறிய மாணவிக்கு எதிராக விடுமுறை நாளில் மாணவர்களை போராட தூண்டியது யார் என்று பேராசிரியர்களின் செல்போன்களை போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். #ChennaiStudentharassment #AgriCollege
    தண்டராம்பட்டு:

    திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி மாணவி, உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, மாணவிக்கு எதிராக நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள் சிலர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, பேராசிரியர்களுக்கு ஆதராக கோ‌ஷம் எழுப்பினர்.

    மாணவர்கள் போராட்டம் செய்த நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகை விடுமுறை. விடுமுறை நாளான அன்று பேராசிரியை ஒருவர் விடுதியில் இருந்த மாணவ, மாணவிகளை அழைத்து வந்து மாணவிக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.

    மாணவ, மாணவிகள் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நடந்தது. இதில் உற்று கவனிக்க வேண்டிய முக்கிய வி‌ஷயம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள். இவர்களுக்கான வகுப்புகள் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கின.

    இவர்களுக்கு, 2-ம் ஆண்டு படித்துவரும் சீனியர் மாணவியை பற்றியோ, அவர் கூறிய பாலியல் புகார்கள் பற்றியோ எதுவும் தெரியாது. பாலியல் புகார் கூறிய மாணவி, உதவி பேராசிரியர் தனக்கு 7 மாதங்களாக தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.

    இச்சம்பவத்தில் மாணவிக்கு எதிராக போலி ஆவணங்களும் தயார் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மாணவியின் பாலியல் புகார்கள் குறித்து யாரிடமும் வாய் திறக்க கூடாது என கல்லூரி முதல்வர் பேராசிரியர்களை அறிவுறுத்தியுள்ளார்.

    மேலும், பேராசிரியர்களின் செல்போன்களை வாங்கி யாருக்காவது தகவல்களை பகிர்ந்துள்ளனரா? யார் யாருக்கு பேராசிரியர்களின் செல்போனில் இருந்து அழைப்புகள் சென்றுள்ளன? என்பது குறித்து ‘டைல்டு’ பதிவை கல்லூரி முதல்வர் ஆய்வு செய்தார்.

    இதுபோன்ற தகவல் வெளியானதையடுத்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் செல்போன் அழைப்புகளும் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பேராசிரியர்களுக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்துவதை தடுக்க கல்லூரி நுழைவு வாயில் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவி வெளிப்படையாக தனக்கு பாலியல் தொல்லை இருந்ததாக கூறிய புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் பேராசிரியர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக மாணவி தரப்பினர் வருத்தம் தெரிவித்தனர். #ChennaiStudentharassment #AgriCollege


    Next Story
    ×