search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.
    X
    வீராணம் ஏரி நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

    வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 45.50 அடியாக குறைப்பு

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து 45.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    தற்போது கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து காவிரி உபரி நீர் தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 27-ந் தேதி முதல் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று வீராணம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 750 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்றைய விட 550 கனஅடி அதிகமாகும். தற்போது வீராணம் ஏரி நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக இருந்தது. இன்றும் ஏரியின் நீர்மட்டம் அதே அளவான 45.50 அடியாக உள்ளது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் மழையால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும். இதையொட்டி பாதுகாப்பு கருதி வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று 45.50 அடியாக குறைக்கப்பட்டது. இன்றும் அதேபோல் தொடர்ந்து 45.50 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு வினாடிக்கு நேற்று 74 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்றும் அதே அளவான 74 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டது.

    வீராணம் ஏரியில் இருந்து விவசாய பாசனத்துக்கு தற்போது தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் தண்ணீரை சேமிக்கும் வகையில் வீராணம் ஏரியில் இருந்து வி.என்.எஸ். மதகு வழியாக உபரிநீர் சேத்தியாதோப்பு அணைக்கட்டுக்கு 676 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது. பின்னர் அந்த தண்ணீர் வெள்ளை ராஜன் வாய்க்கால் வழியாக வாலாஜா ஏரிக்கும், அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் திறந்து விடப்பட்டது. #VeeranamLake
    Next Story
    ×