search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரைச்சல் பாலம் வழியாக தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் காட்சி.
    X
    இரைச்சல் பாலம் வழியாக தமிழக பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் காட்சி.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது - பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    இன்று காலை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. எனவே பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. #Periyardam
    கூடலூர்:

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே கேரள எல்லைப் பகுதியான தேக்கடியில் முல்லைபெரியாறு அணை உள்ளது. 155 அடி உயரம் கொண்ட இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    கேரளாவில் தென்மேற்குபருவமழை தீவிரமடைந்ததால் இந்த ஆண்டு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே இந்த ஆண்டு 142 அடி நீர்மட்டத்தை தொட்டது. அதோடு உபரிநீர் இடுக்கி அணைக்கு திறந்துவிடப்பட்டதால் கேரளப்பகுதி வெள்ளத்தில் தத்தளித்தது.

    இன்று காலை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்தது. எனவே பெரியாறு அணைக்கு தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருந்தது. அது தற்போது 2974 கனஅடி நீர்வருகிறது. அணையின் நீர்மட்டம் 140.10 அடியாக உள்ளது. 2206 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. அதாவது 1600 கனஅடிநீர் மின்உற்பத்தி நிலையம் மூலமும், 606 கனஅடிநீர் இரைச்சல் பாலம் வழியாகவும் திறந்துவிடப்படுகிறது.

    இந்த தண்ணீர் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு போக வைகை அணையை வந்து சேருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உள்ளது. அணைக்கு வரக்கூடிய 2190 கனஅடிநீர் அப்படியே பாசனத்திற்கு திறந்துவிடப்படுகிறது.

    மஞ்சளாறு அணை நீர்மட்டம் 41.85 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 117.75 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 3 கனஅடிநீர் திறந்துவிடப்படுகிறது. பெரியாறு அணைப்பகுதியில் 1 மி.மீ மழையும், தேக்கடியில் 2 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  #Periyardam



    Next Story
    ×