search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை கல்லை போட்டு கொன்றோம்- கைதான வாலிபர் வாக்குமூலம்
    X

    கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் விவசாயியை கல்லை போட்டு கொன்றோம்- கைதான வாலிபர் வாக்குமூலம்

    கள்ளத்தொடர்புக்கு குறுக்கே இருந்ததால் பெண்ணின் கணவரை கல்லைபோட்டு கொலை செய்தோம் என்று கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகே உள்ள மோட்டூரான்கொட்டாய் வீராட்சிகுப்பம் கஞ்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டன் (வயது38). விவசாயி.

    இவரது மனைவி விஜயலட்சுமி (32). இவர்களுக்கு சவுமியா (15), சரண்யா (13) என்கிற மகள்களும், சரவணன் (11) என்ற மகனும் உள்ளனர்.

    கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒன்றை வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இந்த நிலையில் கல்லாவி அருகே உள்ள கல் குண்டு இடத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் கோதண்டன் தலை பகுதி சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    மர்மமான முறையில் அவர் இறந்து கிடக்கும் தகவலை அறிந்த சேலம் ரெயில்வே போலீசார் உடனே அங்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ரெயில்வே போலீசார் இந்த வழக்கு தொடர்பாக கல்லாவி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கோதண்டன் தலையில் மர்ம நபர்கள் யாரோ கல்லைப்போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    இந்த கொலை தொடர்பாக ஊத்தங்கரை டி.எஸ்.பி. அர்ஜூனன் தனிப்படை அமைத்து கொலையாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    நேற்று சந்தேகத்தின் பேரில் வீராட்சிகுப்பத்தை பகுதியைச் சேர்ந்த பழனிவேல் என்கிற பழநேசன் (27) மற்றும் அவரது நண்பர் கஞ்சனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் பழனிவேல் என்கிற பழநேசன் விஜயலட்சுமியிடன் ஏற்பட்ட கள்ளகாதலுக்கு கோதண்டன் இடையூறாக இருந்ததால் தனது நண்பர்கள் 3 பேர் உதவியுடன் கொலை செய்தது அவர்கள் தான் என்று தெரியவந்தது.

    மேலும் தொடர்ந்து பழனிவேல் என்கிற பழநேசன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    கோதண்டனும், அவரது மனைவி விஜயலட்சுமியும் கருந்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்தனர். இதனை பயன்படுத்திக் கொண்ட நான் விஜயலட்சுமியுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டேன். இதுகுறித்து தகவலறிந்த கோதண்டன் என்னிடம் வந்து தனது மனைவியை சந்திக்க கூடாது என்று கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் கோதண்டனை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று நானும் எனது நண்பர்கள் சக்திவேல், ராஜா, மாது ஆகியோருடன் மது குடித்தோம். பின்னர் 4 பேரும் சேர்ந்து கோதண்டன் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்று அவரை கல்குண்டு அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதிக்கு குண்டு கட்டாக தூக்கி கொண்டு வந்தோம். அங்கு வைத்து கோதண்டன் வாயில் மதுவை ஊற்றினோம்.

    மதுகுடித்த அவர் அங்கேயே மயங்கி கிடந்தார். உடனே நான் அருகில் இருந்த கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக கோதண்டன் உயிர் இழந்தார். உடனே நானும் எனது நண்பர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டோம் என்று கூறினார்.

    இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜா, மாது ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    கள்ளத்தொடர்புக்கு குறுக்கே இருந்ததால் விஜயலட்சுமியின் கணவரை கல்லைபோட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×