search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்
    X

    கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- திருமாவளவன் வேண்டுகோள்

    அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #Karunanidhideath #Karunanithi #DMK #thirumavalavan
    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அன்னைத் தமிழைக் காப்பதற்காக ஆவேச நெருப்பாய் ஆர்த்தெழுந்து, அரசியல் களத்தில் தமிழ்க்கொடி ஏந்தி அகவை பதினான்கில் அடியெடுத்து வைத்தவர் அரசியலறிஞர் கலைஞர். பள்ளிக்குச் செல்லும் பால பருவத்தில் போருக்குச் செல்லும் படைவீரனாய்ப் பொதுவாழ்வைத் தொடங்கிய போராளித் தலைவர் கலைஞர்.

    எண்பது ஆண்டுகள் பொதுவாழ்க்கை; எனினும், ஒவ்வொரு நொடியும் போராட்டம்! எத்தனை எத்தனை இடர்கள்; தடைகள்! எத்தனை எத்தனை சதிகள்; பழிகள்! அனைத்தையும் தகர்த்துத் தவிடுபொடியாக்கி, அரசியல் சிகரத்தின் உச்சத்தைத் தொட்ட ஆற்றலாளர் தலைவர் கலைஞர்.

    அவர் அண்ணாவுக்குத் தம்பி; அதனால், எதையும் தாங்கும் இதயம்! அவர் பெரியாருக்குப் பிள்ளை; அதனால், போர்க்குணத்தில் இமயம்! அவர் தமிழுக்குத் தொண்டர்; அதனால் தமிழினத்துக்குத் தலைவர்! “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” என்னும்

    பாவேந்தரின் வாக்குக்கேற்ப தலைவர் கலைஞருக்கு என்றும் சாவே இல்லை!கலைஞர் என்னும் இந்த ஒற்றைச்சொல், நமது இன்பத் தமிழின் எல்லையில்லா இலக்கியமாய் விரிந்து பரந்து உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது.



    தலித்துகள், பழங்குடிகள், மகளிர், சிறுபான்மையினர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் போன்ற விளிம்புநிலை மக்களின் பாதுகாப்பு அரணாக விளங்கிய தலைவர் கலைஞர் அவர்கள், தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழீழத்துக்கு, மாநில உரிமைகளுக்கு என தனது வாழ்வை முழுமையாக ஒப்படைத்துக்கொண்ட மாமனிதர் ஆவார். அவரது இழப்பு தமிழ் நாட்டுக்கு மட்டுமின்றி இந்திய தேசத்துக்கேப் பேரிழப்பாகும்.

    மிகவும் எளிய சமூகப் பின்னணியில் தோன்றி, அரசியல், சமூகம், இலக்கியம் போன்ற அனைத்துத் தளங்களிலும் அளப்பரிய சாதனைகள் செய்து அழியாப் புகழீட்டியுள்ள வரலாற்றுத் தலைவர் கலைஞருக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருதினை வழங்கிச் சிறப்பித்திட வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Karunanidhideath #Karunanithi #DMK #thirumavalavan
    Next Story
    ×