search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹீலர் பாஸ்கர், மேலாளர் சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்தபடம்.
    X
    ஹீலர் பாஸ்கர், மேலாளர் சீனிவாசன் ஆகியோரை போலீசார் கைது செய்து அழைத்து வந்தபோது எடுத்தபடம்.

    இயற்கை மருத்துவ சிகிச்சை பெயரில் வசூல் வேட்டை நடத்திய ஹீலர் பாஸ்கர்

    கோவையில் சுகப்பிரசவத்துக்கு பயிற்சி அளிப்பதாக கைது செய்யப்பட்ட ஹீலர் பாஸ்கர் இயற்கை மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    கோவை:

    திருப்பூரில் ‘யூடியூப்’ வீடியோ பார்த்து வீட்டிலேயே சுகப்பிரசவத்துக்கு முயற்சித்த தனியார் பள்ளி ஆசிரியை கிருத்திகா ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார்.

    இதேபோல காங்கேயத்தில் வீட்டிலேயே இளம்பெண்ணுக்கு சுகப்பிரசவத்துக்கு முயன்றபோது குழந்தை பரிதாபமாக இறந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த உயிரிழப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

    இந்நிலையில் கோவை மாவட்டம் கோவைப்புதூரில் செயல்பட்டு வரும் ‘அனாடமிக் தெரபி பவுண்டேசன்’ எனும் நிறுவனம் சார்பில் வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு ‘நிஷ்டை’ சர்வதேச வாழ்வியல் இலவச பயிற்சி முகாம் வருகிற 26-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    இம்முகாமில் வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூறப்பட்டது. துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன. அதில், இனிய சுகப்பிரசவம் ஒரு வரம். மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்த பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது பற்றி பயிற்சி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதுகுறித்து தகவலறிந்தும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவதால் அந்த அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சுகாதார துறை துணை இயக்குனர் பானுமதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஜான்சன் என்பவர், இந்த நிறுவனத்தை நடத்தி வந்த ஹீலர் பாஸ்கர் (வயது 42), மேலாளர் சீனிவாசன்(32) ஆகியோர் சுகப்பிரசவ முறை குறித்து ஆலோசனை வழங்குவதாக கூறி தன்னிடம் ரூ.5 ஆயிரம் கேட்டு ஏமாற்ற முயன்றதாக புகார் கூறினார்.

    புகாரின்பேரில் ஹீலர் பாஸ்கர், சீனிவாசன் ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் 420(மோசடி), 511 (குற்றம் செய்ய முயல்வது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். கைதான ஹீலர் பாஸ்கர் டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் படித்தவர். அக்குபஞ்சர் மருத்துவத்தில் டிப்ளமோ படித்துள்ளார். இவர் கடந்த 9 ஆண்டுகளாக இதுபோன்ற பயிற்சி முகாம்களை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இவர் தன்னை டாக்டர் என அறிவித்து யூடியூப்பில் இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம், அக்குபஞ்சர் சிகிச்சை, யோகா பயற்சிகள் குறித்து வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானார். வெப்சைட்டை பயன்படுத்தி அதன் மூலம் தனது அமைப்புக்கு பணம் வசூலித்து வந்துள்ளார். இலவச பயிற்சி முகாம் என கூறியதால் யாரிடமும் பணம் வாங்குவது கிடையாது. ஆனால் தனது அமைப்பு சார்பில் ஏழைகளுக்கு உதவி செய்வதாக கூறி நன்கொடையாக பல ஆயிரங்களை வசூலித்து வந்துள்ளார்.

    உடலே மருந்து என்பது தான் இவரது தாரக மந்திரம். எல்லா நோய்களையும் இயற்கை மருத்துவத்திலேயே குணப்படுத்தி விடலாம் என்ற இவரது அறிவுரைகளை நம்பி ஆயிரக்கணக்கானோர் பயிற்சி முகாம்களில் பங்கேற்றுள்ளனர்.

    தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, புதுச்சேரி என பல மாநிலங்களிலும், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பயிற்சி முகாம்களை நடத்தி லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இவரின் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா? இவரால் இதற்கு முன்பு யாரும் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே ஹீலர் பாஸ்கர், சீனிவாசன் ஆகியோரை கோவை ஜே.எம்.7 மாஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். இருவரையும் வருகிற 16-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.

    இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×