search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு மீண்டும் நிறுத்தம்
    X

    கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு மீண்டும் நிறுத்தம்

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைந்ததால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதை நிறுத்தப்பட்டது.
    திருச்சி:

    கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து அணைக்கு வரும் உபரிநீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. ஒரு கட்டத்தில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் வந்தது.

    இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 24-ந்தேதி திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் சுமார் 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக 5 ஆண்டுகளுக்கு பின்னர் கொள்ளிடத்தில் இருகரைகளையும் தொட்டுக் கொண்டு தண்ணீர் ஓடியது. கடந்த 27-ந்தேதி ஒரு நாள் மட்டும் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரின் அளவு குறைந்ததால் கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது 26 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. (நேற்று முன்தினம் 58 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது). அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 25 ஆயிரத்து 638 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

    மேட்டூரில் இருந்து வரும் உபரி தண்ணீரின் அளவு குறைந்ததால் திருச்சி கொள்ளிடம் ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது இன்று காலை 5 மணிக்கு நிறுத்தப்பட்டது. மேலும் அய்யன் வாய்க்கால், பெருவளை வாய்க்காலில் வினாடிக்கு 450 கனஅடியும், கட்டளை வாய்க்காலில் 400 கனஅடியும், உய்யக்கொண்டான் வாய்க்காலில் 750 கனஅடி தண்ணீரும் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது.

    கொள்ளிடத்தில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் அங்குள்ள மணல் திட்டுகள் வெளியே தெரிகின்றன. இதே போல் முக்கொம்பு அணையிலும் ஆங்காங்கே மணற்பரப்பு தெரிகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாலைவனம் போல் காட்சி அளித்த காவிரி ஆறு தற்போது மீண்டும் அதே நிலைக்கு திரும்புவது போல் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    கடைமடை பகுதி வரை காவிரி தண்ணீர் செல்வது கேள்விக்குறியாகி உள்ளது. எனவே வரும் தண்ணீரையாவது சேமித்து வைக்க உரிய நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×