search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறை அருகே சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ்கள் மோதல் - 14 பேர் காயம்
    X

    மணப்பாறை அருகே சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ்கள் மோதல் - 14 பேர் காயம்

    மணப்பாறை அருகே நள்ளிரவில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது அரசு பஸ்கள் மோதலில் 14 பேர் காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கே.பெரியபட்டி பிரிவு சாலை அருகே திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நேற்று நள்ளிரவு கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பஸ் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பேருந்தின் முன் பகுதி சேதமடைந்ததுடன் பயணிகள் சிலரும் காயமடைந்தனர். இந்தநிலையில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி , சமீபத்தில் புதிதாக இயக்கப்பட்ட அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.அந்த பஸ்சும் எதிர்பாராத விதமாக ஏற்கனவே லாரி மீது மோதிய அரசு பஸ்சின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ் பயணிகளான ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சிவக்குமார்( வயது 50), திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன் (54), எட்வர்ட் (18), பாலமுருகன், சபரிநாதன், கண்டெய்னர் லாரி டிரைவர் ஜெயராஜ் (38), பழனியை சேர்ந்த காமாட்சி சுந்தரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த சித்திக் (55) ஆகிய 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


    மேலும் வாடிப்பட்டியைச் சேர்ந்த சேகர், வடமதுரையை சேர்ந்த மகேஷ்வரன், தொட்டியத்தை சேர்ந்த பிரசாத், திண்டுக்கல்லை சேர்ந்த அமிர்தம், திருவாரூரை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் ஆகியோர் லேசான காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த விபத்து சம்பவம் குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து விட்டு காயமடைந்தவர்களை மீட்டு அனுப்பி வைப்பதற்காக அங்கு நின்று கொண்டிருந்த தெற்கு சேர்ப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரும் விபத்தில் சிக்கினார். அவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் மொத்தம் 14 பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மணப்பாறை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாசுகி, சப் -இன்ஸ்பெக்டர் ரூபினி, நெடுஞ்சாலை ரோந்து வாகன சப் -இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×