search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடியதில் சென்னை மாநகராட்சி முதல் இடம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
    X

    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடியதில் சென்னை மாநகராட்சி முதல் இடம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு

    இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #ChennaiCorporation #EdappadiPalanisamy
    சேலம்:

    சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நேற்று சேலம் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-

    அ.தி.மு.க. அரசில் கல்வி, சுகாதார துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 8 வழி பசுமை சாலையை பொதுமக்கள் எதிர்க்கவில்லை. நான் விவசாயி என்பதால் எந்தவிதத்திலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். ஆனால் இந்த திட்டத்தை சில கட்சிகளை சார்ந்தவர்கள் மட்டுமே எதிர்க்கிறார்கள். குறிப்பாக தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகளை சார்ந்தவர்கள் மட்டுமே அரசியல் ஆதாயத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

    போக்குவரத்து துறையில் முந்தைய தி.மு.க.அரசு ரூ.6 ஆயிரம் கோடி கடனில் விட்டு விட்டு சென்றது. டெப்போக்களையும் அடமானம் வைத்துவிட்டு சென்றுவிட்டனர். எதற்கு எடுத்தாலும் இப்படி செய்யலாம், அப்படி செய்யலாம் என்று கூறும் மு.க.ஸ்டாலின் அவர் இருக்கும் போதே செய்ய வேண்டியது தானே?. இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக வாழக்கூடிய மாநகராட்சியில் சென்னை மாநகராட்சி முதல் இடத்தில் உள்ளது. சட்டமன்றத்தில் மாற்றி, மாற்றி கேள்வி கேட்கிறார்கள். அதற்காகவே தினமும் 3 மணி நேரம் அனைத்து துறை தகவலையும் படித்து, அனைத்திற்கும் பதில் சொல்கிறேன்.

    மு.க.ஸ்டாலின் போராட்டம் செய்தால் உடனே ராஜினாமா செய் என்று கூறுகிறார். அந்த அளவிற்கு நாற்காலி ஆசை. நான் ஒன்றும் பிடித்து கொண்டு இல்லை, மக்களாலும், ஒவ்வொரு தொண்டர்களாலும் கிடைத்தது. தமிழகம் முழுவதும் நான்கு வழிச்சாலைகளாக 40 சாலைகள் அமைக்க மத்தியஅரசிடம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இதில் 19 சாலைகளுக்கு அனுமதி கிடைத்து விட்டது. 21 சாலைகள் பரிந்துரையில் உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலைகள் அமைத்தால் அமெரிக்காவிற்கு இணையாக தமிழகம் மாறிவிடும்.

    எனது உறவினர் டெண்டரில் ஊழல் செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் அத்தனையும் பொய். சட்டத்திற்கு உட்பட்டு அனைத்து டெண்டர்களும் விடப்படுகிறது. தி.மு.க. ஒரே நாளில் ஒருவருக்கு 8 முறை டெண்டர் கொடுத்துள்ளனர். தி.மு.க.வினரே ஊழலிலே பிறந்து ஊழலிலே திளைத்தவர்கள். திருப்பதி கோவிலில் அணைகள் எல்லாம் நிரம்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்தற்கு கிண்டல் செய்தார்கள். ஆனால் இப்போது மேட்டூர் அணை ஒரே மாதத்தில் நிரம்பி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.

    வழக்கு முடிவு பெறும் நிலையில் உள்ளதால் உள்ளாட்சி தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. இதேபோல் நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலை உள்ளது. எனவே எந்த தேர்தல் வந்தாலும் சந்திக்க கட்சியினர் ஆயத்தமாக இருக்க வேண்டும். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் ஒவ்வொரு வார்டுகளிலும் குறைந்தது 25 விண்ணப்பங்கள் சேர்க்க வேண்டும். நிறைய விஷயம் (தி.மு.க.) பற்றி சொல்ல வேண்டியுள்ளது. தடுமாற்றத்திலும், துக்க நேரத்தில் இருப்பதாலும் மனிதாபிமானத்தோடு பேசவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். #ChennaiCorporation #EdappadiPalanisamy  #Tamilnews
    Next Story
    ×