search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவில் இருந்து விடுவிக்கப்பட்ட19 மீனவர்களை படத்தில் காணலாம்.
    X
    ஆந்திராவில் இருந்து விடுவிக்கப்பட்ட19 மீனவர்களை படத்தில் காணலாம்.

    ஆந்திராவில் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் விடுவிப்பு - சொந்த ஊர் திரும்பினர்

    ஆந்திராவில் சிறைப்பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 19 பேர் விடுவிக்கப்பட்டதையடுத்து இன்று சொந்த ஊர் திரும்பினர்.
    கீழ்வேளூர்:

    நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் கடந்த 11-ந் தேதி தமிழக எல்லைப்பகுதியை தாண்டி ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இதனை அறிந்த ஆந்திர மீனவர்கள் தமிழக மீனவர்கள் 19 பேரையும் சிறை பிடித்தனர். பின்னர் அவர்களை ஆந்திர கடலோர பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை மீனவர்கள் மாவட்ட கலெக்டரை சந்தித்து சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களையும் மீட்க கோரி மனு கொடுத்தனர்.

    மேலும் நாகை பஞ்சாயத்தார் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி 25 மீனவர்கள் சென்னை சென்று மீன்வளத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த 19 மீனவர்களையும், அவர்களின் 2 விசைப்படகுகளையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதைத் தொடர்ந்து தமிழக மீன் வளத்துறை அதிகாரிகள் ஆந்திர கடலோர காவல் படை போலீசாரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யொட்டி விடுவிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 19 பேரும் ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று நாகப்பட்டினம் வந்து சேர்ந்தனர். அவர்களை குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்று வீடுகளுக்கு அழைத்து சென்றனர். அப்போது மீட்கப்பட்ட மீனவர்கள் தங்களது 2 விசைப்படகுகளையும் மீட்டு தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
    Next Story
    ×