search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை பட்ஜெட் கூட்ட தொடரை ஒரு வாரம் முன்னதாக முடிக்க முடிவு
    X

    புதுவை பட்ஜெட் கூட்ட தொடரை ஒரு வாரம் முன்னதாக முடிக்க முடிவு

    நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தால் புதுவை பட்ஜெட் கூட்ட தொடரை ஒரு வாரம் முன்னதாகவே முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபைக்கு மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்து உள்ளது.

    பாரதிய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோர் எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணமும் செய்து வைத்தார்.

    ஆனால், நியமன எம்.எல்.ஏ.க்களை சட்டசபைக்குள் அனுமதிக்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுத்து வருகிறார். இதனிடையே சென்னை ஐகோர்ட்டு எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும் என தீர்ப்பு அளித்தது.

    சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஐகோர்ட்டு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்காமல் வருகிற 19-ந் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

    இதனால் புதுவை சட்டசபையின் பட்ஜெட் தொடரில் பங்கேற்போம் என நியமன எம்.எல்.ஏ.க்கள் அறிவித்தனர். இதற்காக நேற்றைய தினம் 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் புதுவை சட்டசபைக்கு வந்தனர்.

    ஆனால், அவர்களை சபை காவலர்கள் சட்டசபை வளாகத்துக்குள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் சபை காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் சபைக்குள் நுழைய விடாததால் திரும்பி சென்றனர்.

    மேலும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மதிக்காத சபாநாயகர் வைத்திலிங்கம் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர போவதாகவும் அறிவித்துள்ளனர். வருகிற 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வரும் போதே அவமதிப்பு வழக்கை தொடர இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

    வருகிற 19-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக சட்டமன்றத்துக்கு நேரடியாக ஏதேனும் உத்தரவை பிறப்பிக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்ட தொடரை ஒரு வாரம் முன்னதாக முடிக்க முடிவு செய்துள்ளனர்.

    இந்த மாதம் 27-ந் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) அனைத்து மானிய கோரிக்கை விவாதத்தை முடிப்பது என்றும், 19-ந் தேதி தனிநபர் தீர்மானத்துடன் சட்டசபை கூட்ட தொடரை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    சட்டசபை கூட்ட தொடர் ஒரு வாரம் முன்னதாக முடிகிறது.
    Next Story
    ×