search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூர்யா
    X
    சூர்யா

    சங்கராபுரம் அருகே வாழைப்பழத்தில் வி‌ஷம் கலந்து மாணவன் கொலை?- போலீசார் விசாரணை

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே வாழைப்பழம் சாப்பிட்ட 10-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்தது குறித்து நண்பர்கள் 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ரிஷிவந்தியம்:

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சூர்யா (வயது 16).

    இவர் புதுப்பட்டில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை ராவுத்த நல்லூரில் உள்ள ஆஞ்சநேயர்கோவில் முன்பு சூர்யா நெய்விளக்கு விற்பனை செய்து கொண்டிருந்தார். அவருடன் புதுப்பேட்டையை சேர்ந்த நண்பர்களான அய்யப்பன், பிரபாகரன் மற்றும் பிரகாஷ் ஆகியோரும் நெய்விளக்கு விற்றனர்.

    அப்போது சூர்யாவிடம் அவரது நண்பர்கள் ஒரு வாழைபழத்தை கொடுத்தனர். இது கோவிலில் பூஜை செய்த பழம். இதை நீ சாப்பிடு என்று கூறினர். இதை நம்பிய சூர்யா அந்த வாழைப்பழத்தை சாப்பிட்டார். அந்த பழத்தை சாப்பிட்ட பிறகு சூர்யாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டு துடித்தார்.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். கோவிலுக்கு வந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து சூர்யாவை சிகிச்சைக்காக புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

    இதுகுறித்து சூர்யாவின் தந்தை சுப்பிரமணியன் வட பொன்பரப்பி போலீசில் புகார் செய்தார். அதில் என் மகன் சூர்யாவுக்கு அவரது நண்பர்கள் கொடுத்த வாழைப் பழத்தில் வி‌ஷம் கலந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். அதை சாப்பிட்ட பிறகுதான் என் மகன் இறந்தான். அவனது சாவில் மர்மம் உள்ளது என்று கூறியிருந்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்று போலீசார் வழக்குபதிவு செய்து, சூரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து சூர்யாவின் நண்பர்கள் அய்யப்பன், பிரபாகரன் மற்றும் பிரகாஷ் ஆகிய 3 பேரையும் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வாழை பழத்தை சூரியாவுக்கு யாராவது கொடுக்க சொன்னார்களா? அல்லது நண்பர்களே கொடுத்தனரா? வாழை பழத்தில் வி‌ஷம் கலந்திருந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Tamilnews
    Next Story
    ×