search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாத்தூர் தொட்டிப்பாலத்தின் அடியில் ஓடும் பரளி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.
    X
    மாத்தூர் தொட்டிப்பாலத்தின் அடியில் ஓடும் பரளி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சி.

    குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு - பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது.
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் நேற்று இரவும் கனமழை கொட்டித் தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையினால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்கு அதிகபட்சமாக 53.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, கொட்டாரம், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, இரணியல், முள்ளங்கினாவிளை, மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் நேற்று இரவு மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

    திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டு, விட்டு பெய்து வரும் சாரல் மழையினால் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்துவரும் மழையினால் அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரேநாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 12.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1040 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 151 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 75.20 அடியாக உள்ளது. அணைக்கு 1685 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையில் இருந்து 675 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை நிரம்பி வருவதை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு உள்ள தண்ணீர் குழித்துறை ஆற்றில் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 14.14 அடியாக உள்ளது. பொய்கை அணை 15.60 அடியை எட்டியது. மாம்பழத்துறையாறு அணை கடந்த ஒரு வாரமாக முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி நிரம்பி வழிகிறது.

    அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் நூற்றுக்கு மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    அணையின் நிலவரம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மலையோர பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நிரம்பி வருவதால் அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறார்கள். தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அணையில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்படும். சிற்றாறு அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    பேச்சிப்பாறை-37.4, பெருஞ்சாணி-23.2, சிற்றாறு 1 - 36.2, சிற்றாறு 2 - 31, மாம்பழத்துறையாறு-20, கொட்டாரம்-3.4, மயிலாடி-7.2, பாலமோர் -53.4, ஆரல்வாய்மொழி-5.2, கன்னிமார்-24.6, சுருளோடு-15.2, நாகர்கோவில்-16.8, பூதப்பாண்டி-10.4, ஆனைக்கிடங்கு-20, அடையாமடை-28, முள்ளங்கினாவிளை-32, புத்தன்அணை-24.6


    Next Story
    ×