search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை
    X

    சேலம் அருகே டாக்டர் வீட்டில் 40 பவுன் நகை-பணம் கொள்ளை

    சேலம் கந்தம்பட்டி மேம்பாலம் அருகே டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    சேலம்:

    சேலம் கந்தப்பட்டி அருகே மேம்பாலம் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர் ரகீமா. டாக்டரான இவர் தர்மன் நகர் 3-வது கிராஸ் பகுதியில் கிளினீக் வைத்து நடத்தி வருகிறார். மேலும் தனது வீட்டிலும் கிளினீக் வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டி விட்டு கோவைக்கு சென்றார். இன்று காலை அவர் அங்கிருந்து திரும்பி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு நெம்பி உடைக்கப்பட்டு இருந்ததையும், கதவு திறந்து கிடந்ததையும் கண்டும் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் ரகீமா வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் எல்லாம் வெளியே தூக்கி வீசப்பட்டு இருந்தது. சமையல் அறை மற்றும் ஹால் உள்ளிட்ட அறைகளில் இருந்த பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    ரகீமா கோவைக்கு செல்லும் முன்பு பீரோவில் 40 பவுன் நகையும், ரூ.45 ஆயிரம் பணமும் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நகையும், பணத்தையும் காணவில்லை.

    இது குறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு உடனடியாக ரகீமா தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து வீடு முழுவதும் பார்வையிட்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து பீரோ மற்றும் கதவில் கைரேகைகள் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவாகி இருந்தது. அந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர். இந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களுடன் ஒப்பிட்டு பார்க்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், ரகீமா நேற்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றதை கொள்ளையர்கள் யாரோ பார்த்து இருக்கிறார்கள். பின்னர் நள்ளிரவில் கொள்ளை கும்பல் மேம்பால நகருக்கு வந்து டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து தங்களது கைவரிசையை காட்டி இருக்கிறார்கள்.கொள்ளை போன இந்த நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என தெரிய வந்தது.

    டாக்டர் ரகீமாவிடம் போலீசார், உங்களுக்கு யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? சந்தேகப்படும் நபர்களை தெரிவிக்கலாம் என்றனர். இந்த துணிகர செயலில் ஈடுபட்டவர்கள் யார்? யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

    அருகில் உள்ள வீடுகளின் முன்பு சி.சி.டி.வி. கேமிரா பொருத்தி இருக்கிறார்களா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    டாக்டர் வீட்டில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×