search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெயினருவியில் ஆர்ச்சை மூழ்கடித்தபடி தண்ணீர் கொட்டிய காட்சி.
    X
    மெயினருவியில் ஆர்ச்சை மூழ்கடித்தபடி தண்ணீர் கொட்டிய காட்சி.

    மலைப்பகுதிகளில் பலத்த மழை - குற்றால அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு

    மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 2-வது நாளாக நீடித்தது.
    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதும் குற்றாலத்தில் சீசன் ஆரம்பிக்கும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் நிலவும். சீசன் காலத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து குளிர்ச்சியான தட்ப வெப்ப நிலை நிலவும்.

    மேலும் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அருவிகளில் குளிக்கவும், குற்றால சீசனை அனுபவிக்கவும் சீசன் காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் வருவார்கள்.

    இந்த ஆண்டு குற்றால சீசன் மே மாத இறுதியிலேயே தொடங்கி விட்டது. அப்போது முதல் ஜூன் மாத இறுதி வரை குற்றாலத்தில் சீசன் அருமையாக இருந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியபடி இருந்தது.

    இந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து வெயில் அடித்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்தது. இருந்தபோதிலும் 2-வது வாரத்தில் சீசன் மீண்டும் களை கட்டியது. அதிலிருந்து அருவி களில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இந்நிலையில் குற்றாலம் மலைப் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    அதிலும் மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் நேற்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்வதால் அருவிகளில் இன்றும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை.

    மெயினருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதே போல் ஐந்தருவியில் 5 கிளைகளிலும் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. பழைய குற்றால அருவியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதனால் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 2-வது நாளாக நீடித்தது. அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    புலியருவியில் அதிக அளவு தண்ணீர் விழுந்த போதிலும் அங்கு மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் புலியருவிக்கு சென்றனர். ஏராளமான வாகனங்கள் சென்றதால் புலியருவி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அருவியிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    குற்றாலம் பகுதியில் மட்டுமின்றி தென்காசி, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் காற்றும் வேகமாக அடிக்கிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் விழுந்தன. மின் கம்பிகள் அறுந்ததால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது.

    குற்றாலம் பராசக்தி கல்லூரி அருகே இருந்த பழமையான பெரிய மருதமரம் காற்றுக்கு வேரோடு சாய்ந்தது. அந்த மரம் அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் அங்கு சென்று டிரான்ஸ்பார்மர் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×