search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பகோணம் மீன்மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்
    X

    கும்பகோணம் மீன்மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல்

    கும்பகோணம் மீன்மார்க்கெட்டில் ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நால்ரோடு செல்லும் சாலையில் புதிய மீன்மார்க்கெட் இயங்கி வருகிறது.

    இங்கு ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த மார்க்கெட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மீன் வியாபாரிகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கும்பகோணம் மீன்மார்க் கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைதொடர்ந்து தஞ்சை மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் தலைமையில் மீன்வளத்துறை பல்கலைக்கழக பேராசியர் செந்தில்குமார், ஆய்வாளர் துரைராஜ், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மகேஷ் மற்றும் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன், நகராட்சி அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இன்று அதிகாலை 6 மணியளவில் மீன்மார்க் கெட்டில் அதிரடியாக சோதனை செய்தனர்.

    ஒவ்வொரு கடை..கடையாக சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த மீன்களை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது ஒரு சில கடைகளில் ‘பாம்லீன்’ எனப்படும் ரசாயனம் மீன்களில் கலந்து விற்பனை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அந்த மீன்களை தனியாக பிரித்து பறிமுதல் செய்தனர்.

    இந்த ரசாயனம் கலந்த 100 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அழுகிய மீன்களையும் சில இடங்களில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    காலை நேரத்தில் எந்த முன் அறிவிப்புமின்றி அதிகாரிகள் திடீர் சோதனை நடந்த வந்ததால் மீன் வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அதிகாரிகள் சில வியாபாரிகள் கடைகளில் மீன்களை சோதனை நடத்திய போது, இந்த மீன்கள் எங்களுடையது இல்லை என்று கூறி அதிகாரிகளை குழப்பமடைய செய்தனர்.

    இதனால் பறிமுதல் செய்யப்பட்ட மீன்களை எந்த வியாபாரி விற்றது? என்பதை அதிகாரிகளால் அறியமுடியவில்லை.

    கும்பகோணம் மீன்மார்க் கெட்டில் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து சோதனை செய்தோம். இதில் 100 கிலோக்கும் மேல் பாம்லின் என்ற ரசாயனத்தை தடவியிருந்த மீன்களை பறிமுதல் செய்துள்ளோம்.

    பொதுவாக மீன்களை ஐஸ்பெட்டியில் வைத்து விற்பனை செய்யவேண்டும். ஐஸ்கட்டியில் தான் மீன்கள் கெடாமல் இருக்கும்.

    இதுபோன்ற ரசாயன கலந்த மீன்களை வாங்கி சாப்பிட்டால் குறிப்பாக புற்றுநோய், ஒவ்வாமை போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது. பாம்லீன் எனப்படும் இந்த ரசாயனத்தை பயன் படுத்தினால் மீன்கள் கெடாமல் அப்படியே மாதக் கணக்கில் இருக்கும். இதனால் இவை உடனடியாக உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து மீன்மார்க் கெட்டுகளிலும் சோதனை செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    காலை 6 மணிக்கு தொடங்கிய அதிகாரிகள் சோதனை 8 மணி வரை நடந்தது.

    இதனால் 2 மணிநேரமாக நடந்த அதிரடி சோதனையால் இன்று காலை மார்க்கெட்டுக்கு மீன் வாங்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் மீன்களை வாங்காமல் அப்படியே திரும்பி சென்றனர். #Tamilnews

    Next Story
    ×